சாகித்திய அகாதெமியும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகமும் இணைந்து, 2002ல் தமிழ் – மலையாளம் மொழிபெயர்ப்பு பட்டறையை நடத்தியது.
அதில் தமிழிலிருந்தும், மலையாளத்திலிருந்தும், 50 சிறுகதைகளை தேர்வு செய்து, இரு மொழி மொழிபெயர்ப்பாளர்களும் ஒரே இடத்தில் அமர்ந்து மொழிபெயர்ப்பது எனும் திட்டத்தின் படி, மலையாளத்திலிருந்து தமிழில்மொழி சிறுகதைகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம். புத்தகத்தில், 43 சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன.
மலையாளச் சிறுகதையுலகில் மிகச் சிறந்த கதைசொல்லிகளான பொன்குன்னம் வர்க்கி, வைக்கம் முகமது பஷீர், போஞ்ஞிக்கர ராபி, எம்.டி.வாசுதேவன் நாயர், ஓ.வி.விஜயன், சக்கரியா, புனத்தில் குஞ்ஞப்துல்லா, பி.வத்ஸலா, வி.பி.சிவகுமார், சந்திரமதி, சுபாஷ்சந்திரன் என்று மூன்று தலைமுறை சிறுகதையாசிரியர்களின் கதைகளோடு வந்திருக்கிறது தொகுப்பு சிறுகதைகளை சிற்பி பாலசுப்பிரமணியன், வை.கிருஷ்ணமூர்த்தி, விநாயகம் பெருமாள், எம்.பாலசுப்பிரமணியம், மா.நயினார், பா.ஆனந்த குமார், மு.சதாசிவம், குறிஞ்சிவேலன், நிர்மால்யா என ஒன்பது மொழிபெயர்ப்பாளர்கள் நீல பத்மநாபன், மா.அரங்கநாதன், விநாயகம் பெருமாள் ஆகியோரின் வழிகாட்டுதலில் ஐந்தே நாட்களில் மொழியாக்கம் செய்திருக்கின்றனர் என்பதை அறியும் போது வியப்பு மேலிடுகிறது.
ஒரே கதையில் (பூவன் பழம்) நம்பூதிரி இல்லத்துப் பெண்மணிகளை அந்தர்ஜனம் என்றும் ஆத்தோரம்மா என்றும், அழைக்கப்படுவதும், தாம்பூல வகைகளுடன் சேர்த்து சுவைக்கக்கூடிய சிறு வெள்ளி மணியை ஜிண்தான் என்று குறிப்பிடுவதும் படிப்பவரை மலையாள தேசத்து மனநிலைக்கு கூட்டிச் செல்கிறது.
மலையாளச் சிறுகதைகளின் மூலத்தில் இடம் பெற்றிருக்கும் ஜீவன் சிறிதும் கெடாமல், அதை அப்படியே தமிழ் மனதிற்கு மொழிமாற்றித் தந்திருப்பது தனி அழகாக இருக்கிறது.
– ஸ்ரீநிவாஸ் பிரபு