மேடை உரைவீச்சு மூலமும், பட்டிமன்ற நகைச்சுவை பேச்சின் மூலமும் பரவலாக அறியப்பட்டவர் கோவை தனபால். இது இவரது முதல் சிறுகதைத் தொகுப்பு. எழுத்து காலக்கடத்தலுக்கானது அல்ல; அறநெறிகளை மென்மேலும் செம்மைப்படுத்துவதற்கானது என்பதன் அடிப்படையில், 20 தலைப்புகளில் வெவ்வேறு களத்தில் இதில் கதை சொல்லி உள்ளார்.
இவற்றில் பெரும்பான்மை உண்மை சம்பவங்களின் எதிரொலி. மாமியாருக்கு செய்தது மருமகள் மூலம் திரும்ப வரும் என்பதை திருமணச் சிறை கதையின் மூலமும், வருவாய் வழியே இழப்பும் நேரும் என்பதை எச்சரிக்கை என்ற கதையின் வழியும், அப்பாவிகளை ஆற்றில் மூழ்கடித்து அதன் மூலம் வருவாய் ஈட்டும் நபருக்கு நேர்வதை நீர் மிருகம் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.
மேலும், உணவுக் கலப்படம் மூலம் செல்வந்தராகிய ஒருவரின் வாழ்க்கையில் வினைப்பயன் எப்படி எல்லாம் விளையாடும் என்பதை கெடு கதையிலும் விறுவிறுப்பாய் சொல்லி உள்ளார். இப்படி ஒவ்வொரு கதையிலும் ஒரு நீதி போதனை துருத்தாமல் ஒளிந்திருக்கிறது.
– சையத் அலி