மனிதர்களின் மனத்தில் அன்றாட வாழ்க்கையில் தோன்றும் சந்தேகங்கள் எண்ணற்றவை. புறப்பொருள் பற்றிய சந்தேகங்களுக்கான விளக்கங்களை நாம் பலவிதங்களில் அறிந்துகொள்ளலாம். ஆனால், அகத்துக்கு ஒளிதரும் ஆன்மிகம் தொடர்பாக நமக்குத் தோன்றுகின்ற சந்தேகங்களைப் போக்கி, நமக்குத் தெளிவு தருவதென்பது யாரால் முடியும்? வேத சாஸ்திரங்களை நன்றாகக் கற்றுணர்ந்த ஒரு பண்டிதரால்தான் முடியும்!
அமைதியான தோற்றத்தில் அருளொளி வீசும் கனிந்த ஞானியாக வீற்றிருக்கும் 87 வயது நிரம்பப்பெற்ற பெரியவர் பிரம்மஸ்ரீ பி.என். நாராயண சாஸ்திரிகள், கேள்விகளுக்குப் பதில் வடிவம் தந்திருக்கிறார். இவர் முன்னின்று நடத்திய கோயில் கும்பாபிஷேகங்கள் பல நூறு. 1944-ல் பற்பல சாஸ்திர விற்பன்னர்களுக்கிடையே, தகுதியின் காரணமாக, காஞ்சி காமாட்சியம்மன் ஆலய ஸ்ரீ சக்ர கும்பாபிஷேகத்துக்கு, ஸ்ரீ பரமாச்சாரிய சுவாமிகளால் தலைமைச் செய்முறையாளராக நியமிக்கப்பட்டவர். முந்நூறுக்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்களை உருவாக்கியவர். இந்து மகா சமுத்திரத்தில் பயணிக்கும் நமக்கு, அவர் பதில்கள் கலங்கரை விளக்கமாக வழிகாட்டுகின்றன.