வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 806).
திருமால் உறையும் 108 திவ்ய தேசங்கள் பற்றி இதுவரை ஏராளமான புத்தகங்கள் வெளி வந்திருக்கின்றன. அவை பெரும்பாலும் ஒரு சுற்றுலா வழிகாட்டிகளாகவே இருக்கின்றனவே தவிர, ஆன்மிக வழிகாட்டியாக அமையவில்லை. அந்தக் குறையைப் போக்கும் வகையில் ஒரு பெரும் நூலாக வெளி வந்திருக்கிறது இந்தப் புத்தகம்.108 திவ்ய தேசங்களுடன், பக்தர்கள் உகந்து வழிபடும் (அபிமான தலங்கள்) தமிழகத்தில் 16, பிற மாநிலங்களில் 14, ஆகிய 30 தலங்கள், மொத்தம் 138 திவ்ய தேசங்களைப் பற்றிய புராண இதிகாசச் செய்திகள், ஆழ்வாராதிகள் பாடிய பாசுரங்களின் உட்பொருள், ஒவ்வொரு தலத்திற்கும் உரிய சுலோகங்கள் என்று மிக விரிவாக அமைந்திருக்கிறது இந்த நூல்.70 ஆர்ட் பிளேட்டுகளில் பெருமான் தம் தேவியருடன் தரிசனம் தரும் திருக்கோல வண்ணப்படங்கள், பன்னிரு ஆழ்வார்கள், ஆசாரியர் பெருமக்கள் ஆகியோரது வண்ணப்படங்களுடன் நூல் ஒரு அழகுப் பெட்டகமாக அமைந்திருக்கிறது.108 திவ்ய தேசங்களில் 106 மட்டுமே இந்தப் பூவுலகில் உள்ளவை. திருப்பாற்கடலும் (107) பரம பதமும் (108) சாதாரண மானுடர்களால் விஜயம் செய்ய முடியாதவை. வேதங்களில் "அர்ச்சராதி மார்க்கம்' என்று கூறப்படுவது உடலை விட்டு உயிர் பிரிந்து பரமபதப் பயணத்தைத் துவக்குவதைத் தான். திருவாய் மொழி பத்தாம் பத்தில், நம்மாழ்வார் அந்த யாத்திரையின் இன்ப அனுபவத்தை விவரிப்பதைப் படித்து அனுபவிப்பவர்கள் மரண பயம் நீங்கி ஆழ்வார் பெற்ற பேரானந்தத்தை உணர்வர். நூல் முழுமையிலும் ஆசிரியரது பெரும் புலமையும் கடின உழைப்பும் பளிச்சிடுகிறது.வைணவ பக்தர்கள் மட்டுமின்றி, சமய இலக்கிய ரசனை உள்ள அனைவரும் வாங்கிப் படித்துப் பயன்பெறும் நூல்.