விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
கடவுளை நம்புபவன் காட்டுமிராண்டி...
கடவுளை எனக்குப் பிடித்திருக்கிறதா என்பது முக்கியமில்லை. கடவுளுக்கு என்னைப் பிடித்திருக்கிறதா என்பதுதான் முக்கியம்.
கடவுள் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
இப்படிச் சொல்லப்படுவதெல்லாம் ஏதோ புதிதாகத் தோன்றியிருக்கும் நவீன இயக்கத்தின் வெளிப்பாடுகளாகச் சிலருக்குத் தோன்றலாம். ஆனால், இந்து சமயத்தின் ஆழமான தத்துவ மரபைப் பற்றித் தெரிந்திருக்கும் ஒருவருக்கு இவை கடலில் எழும் இன்னொரு அலையே என்பது நன்கு புரிந்திருக்கும்.
கடவுள் என்ற கற்பிதம் தோன்றிய மறு நிமிடத்திலிருந்தே அதை மறுதலிக்கும் கோட்பாடுகளும் தோன்றிவிட்டன. கடவுளை மறுக்கும் அந்தக் கலகக் கோட்பாடுகள், கடவுளை ஏற்கும் கோட்பாடுகளைப் போலவே சமூக நலனுக்குப் பெரும் பங்கை ஆற்றியிருக்கின்றன.
இந்தியாவில் அந்தக் கோட்பாடுகள் மிகப் பெரிய மரியாதையுடன் மதிக்கப்பட்டுள்ளன; மிகுந்த உத்வேகத்துடன் பின்பற்றப்பட்டுள்ளன. கடவுள் ஏற்பு மற்றும் கடவுள் மறுப்பு ஆகிய இரண்டு தத்துவங்களும் இந்திய ஆன்மிகத்தின் இரண்டு கண்கள் போல் ஒளி வீசி வழி நடத்தியுள்ளன.
இந்தியாவில் தோன்றிய ஆன்மிக மார்க்கங்களை வெகு சுருக்கமாகவும், அதேசமயம் அவற்றின் ஆழத்தையும் பிரமாண்டத்தையும் நன்கு புரிந்துகொள்ளும் வகையிலும் அற்புதமாக விவரித்துள்ளார் நூலாசிரியர் பத்மன்.
உண்மை என்பது ஒன்றுதான். அறிஞர்கள் அதனைப் பல்வேறு கோணங்களில் சொல்கிறார்கள் என்பது எவ்வளவு உன்னதமான தத்துவம் என்பது இந்த நூலைப் படித்து முடிக்கும்போது விளங்கும்.