நெல்லை கண்ணன், 1998 முதல், 2011 வரை, ‘தினமலர்’ உள்ளிட்ட நாளிதழ்கள், ‘ஆனந்த விகடன்’ உள்ளிட்ட பருவ இதழ்களில் எழுதிய, 45 கட்டுரைகளின் தொகுப்பாக, இந்த நூல் வெளிவந்துள்ளது. நூலில், ‘ஏதோ தப்பைப் பண்ணியிருக்கான். இல்லே, இனி பண்ணப்போறான். தேவையில்லாம என்னை புகழப் பாக்கான். அவனைக் கவனிங்க’ என்பார் பெருந்தலைவர். இன்றோ புகழுரைகள்... புகழுரைகள்... ’’ என்பது போன்ற காமராஜரின் தூய அரசியல் பங்களிப்பை வாயார புகழ்கிறார். அதேநேரம், கருணாநிதி முதல் கனிமொழி வரை உள்ள திராவிட இயக்கத்தினரை கடுமையாக விமர்சிக்கிறார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களையும் தாராளமாகவே அர்ச்சிக்கிறார். இடைஇடையே, அவரின் இலக்கிய, பட்டிமன்ற அனுபவங்களும் நுழைகின்றன. நெல்லை கண்ணனின் மனதை கவர்ந்த, வள்ளுவர், திருமூலர், அவ்வை, காளமேகம், இரட்டைப் புலவர்கள், கம்பன் ஆகியோரின் பாடல்கள், இந்த நூலில் கட்டுரைகளாக விரிகின்றன.
கட்டுரைகளில், நெல்லை முகங்களும், மண் வாசனை ததும்பும் சொற்களும் இயல்பாக விளையாடுகின்றன.
நடுவூர் சிவா