‘படை குடி கூழ் அமைச்சு நட்பு அரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு’ என்பார் திருவள்ளுவர்.
இந்த ஆறையும் அடிப்படையாகக் கொண்டது இந்த நுால்.
இன்றைக்கு, 2,500 ஆண்டுகளுக்கு முன், பல புதுமைப் புரட்சி, சீர்திருத்தங்களை திட்டமிட்டு, மவுரியப் பேரரசை ஒரு மக்கள் நல அரசாக மாற்றி, அதை உலகெங்கும் பரப்பிய பெருமை, சாணக்கியரின் மாபெரும் படைப்பான அர்த்த சாஸ்திரம்.
சாணக்கியரின் அறைகூவல் துவங்கி, இதோ, ஒரு மக்கள் நல அரசு என்று, 13 முத்தான தலைப்புகளில் நுால் நிறைவடைகிறது.
சாணக்கியர் என்றாலே குறுக்குப்புத்திக்காரர், வஞ்சகப்புலி, சூழ்ச்சிக்காரர் என்றெல்லாம் நினைக்கும் உலகிற்கு, இந்த நுால் அவருடைய மறுபக்கமான புரட்சிக் கருத்துக்கள் என காட்டுகிறது.
சாணக்கியர், ‘பாஸ்போர்ட்’டை பற்றி அன்றைக்கே சொல்லிவிட்டார். சொன்னது மட்டுமல்ல, செய்தும் காட்டி விட்டார்.
தனியா ஒரு பாஸ்போர்ட் இலாகாவே மவுரியர் ஆட்சியில் அமைந்திருந்தது. அதிகாரி, ‘முத்ராயாத்யக் ஷா’ என்று அழைக்கப்பட்டார் (பக்.69).
நீதிபதிகள் பாரபட்சமின்றி வழக்குகளை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும். பாரபட்சமாக தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது (பக். 131).
– பேரா., ஆர்.நாராயணன்