புத்தகத்தைப் படிக்கத் துவங்கியபோது, உடலில் திடீர் உஷ்ணம் பரவி, கடும் அதிர்ச்சி ஏற்பட்டு விட்டது. என்ன சொல்ல வருகிறார் நுாலாசிரியர்? புவி வெப்பமயமாதல் என்ற விஷயமே கிடையாது என்பதை, எடுத்த எடுப்பிலேயே, வெட்ட வெளிச்சமாகப் போட்டுடைத்து விட்டாரே... அதை எப்படி, தர்க்க ரீதியாக விவரிக்கப் போகிறார், அப்படியெனில், வெப்பமயமாதல் தொடர்பான அனைத்து கட்டுரைகளும், கருத்துகளும், வெறும், ‘டுபாக்கூர்’ தானா, அப்படி யெனில், பூமி வெப்பம் அதிகரிப்பதேன், காலநிலை மாற்றத்தைப் பற்றிய தகவல்களில் உண்மை இல்லையா என, எண்ணாயிரம் கேள்விகள் மண்டையைக் குடைந்தன.
‘புவி வெப்பமயமாதலைப் பற்றிய ஆய்வெல்லாம், வழி கெட்டவை. முக்கியமாக, ‘கிரீன் பீஸ்’ அமைப்பின், முழு முழு பொய்கள் அனைத்தும், உலகளவில் எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதற்கு, பல அறிவியல் வல்லுனர்கள் கொடுக்கும் தகவல்களே சான்று’ என்கிறார்.
‘காலநிலை மாற்றத்துக்கு, பிரதான காரணமாகச் சொல்லப்படும், கார்பன் டை ஆக்சைடு, மிக மிகச் சிறிய அளவில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்துகிறது; 10 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பாகவே, புவி வெப்பமயமாதல் கண்டறியப்பட்டு விட்டது.
‘தற்போது, மனிதர்களின் நடவடிக்கைகளால் உமிழப்படும் கார்பன் டை ஆக்சைடு, முன்பெல்லாம் கிடையாதே’ என, அறிவியல் வல்லுனர் ஒருவர் சொல்வதாக எடுத்துரைக்கிறார்.
சூரியன், எரிமலை, நட்சத்திரங்கள், பூமியின் அச்சு சாய்வு, மீத்தேன் வாயு, காற்று மண்டல புழுதி, சமுத்திரச் சுழற்சி என, ஏகப்பட்ட காரணிகளும், புவி வெப்பமயமாவதற்குக் காரணம் என்றும், ஒரு மில்லியன் காற்றுத் துகள்களில், வெறும், 400 துகள்களே கார்பன் டை ஆக்சைடு என்றும், அது ஒன்றும் பெரிய ஆபத்தல்ல என்றும், வல்லுனர்கள் கருத்துக்கள் வாயிலாகவே விவரிக்கிறார்.
– பா.பானுமதி