மகாபாரதம் தொடர்பான சம்பவங்களை, 39 அத்தியாயங்களில் விவரித்துச் செல்லும் ஆங்கில நுால். மையக்கதையிலிருந்து கிளைத்த பல்வேறு கதைகள் நாடகப் பாணியில் நகர்ந்து செல்வது சிறப்பு. ஹஸ்தினாபுரத்தை குரு வம்சம் ஆண்டபோது, கவுரவர்களுக்கும், கிருஷ்ணரின் ஆதரவு கொண்ட பஞ்சபாண்டவர்களுக்கும் நடந்த போரில் கையாளப்பட்டதே பிரம்மாஸ்திரம் எனப்படுகிறது.
தருமத்தைக் காப்பதே காலங்களின் நோக்கமாகக் கூறி, யுக மாற்றத்தில் வரும் அதருமங்களை வீழ்த்தி, தருமத்தைக் காப்பதற்கான ஆயுதமாக பிரம்மாஸ்திரம் விளக்கப்படுகிறது. அசுர புத்திரன் ஆர்யமான், அக்னி மற்றும் வருண புத்திரர்கள் போன்ற பல்வேறு கதைமாந்தர்களுக்கு இடையிலான முரண்கள், தோழமைகள், உரசல்கள் போன்ற நிகழ்வுகளின் வருணனைகள் பலவும் காட்சிகளாக விரிகின்றன. கதைகளில் வெளிப்படும் அறிவுரைகள், சூழ்ச்சிகள் போன்றவை இன்றைய வாழ்க்கைச் சூழலிலும் நடைபெறுவது நோக்கத்தக்கது. புராணத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் படிக்கலாம்.
– மெய்ஞானி பிரபாகரபாபு