பதிப்பாசிரியர்: முனைவர் ராம.சுந்தரம், முனைவர் செ.பழனிச்சாமி, முனைவர் சா.கிருட்டிணமூர்த்தி, வெளியீடு: அன்னத்திந்திய அறிவியல் தமிழ்க்கழகம், தஞ்சாவூர் - 613 010. (பக்கம்:600)
தொல்காப்பியத்தில் தொடங்கி, இன்றைய புதுக்கவிதை வரை அறிவியல் சிந்தனைகள் எவ்விதம் இலக்கியங்களில் கையாளப்பட்டுள்ளன என்பதை "அறிவியல் தமிழ் வளர்ச்சிப்போக்குகள்' என்னும் மையப் பொருண்மையில் நடைபெற்ற கருத்தரங்கில் படிக்கப் பெற்ற 96 ஆய்வாளர்களின் கட்டுரைகள், இதில் தொகுக்கப்பட்டுள்ளன.
பண்டைய தமிழரின் அறிவியல் சிந்தனைகள், தொன்மை அறிவியல், கணிதவியல் சிந்தனைகள், மருத்துவக் கோட்பாடு, விலங்கியற் கொள்கைகள், தாவரவியல் செய்திகள், தொழில்நுட்பம்,விண்வெளி அறிவியல், உளவியல் சிந்தனைகள், கடற்பயணத் தொழில்நுட்பம், சுற்றுப்புறச் சூழலியல் கருத்துக்கள் இவ்வாறாக எழுதப்பட்ட கட்டுரைகளும்,
ஆற்றுப்படை நூல்கள், பதிற்றுப் பத்து, எட்டுத்தொகை, நற்றிணை, முல்லைப்பாட்டு, கண்ணதாசன் கவிதைகள் என குறிப்பிட்ட இலக்கியங்களில் கூறப்படும் அறிவியல் செய்திகளும் கட்டுரைகளாக இடம் பெற்றுள்ளன.
பண்டைய தமிழர்கள் தங்கள் வாழ்வை மேம்பாடுடையதாக அமைத்துக் கொள்ள அறிவியல் சிந்தனை கொண்டவர்களாகத் திகழ்ந்துள்ளனர் என்பதற்கு ஏராளமானச் சான்றுகளை இக்கட்டுரைகள் எடுத்தியம்புகின்றன. அறிவியல் தமிழ் பற்றி அறிந்து கொள்ள விழைவோருக்கு இந்நூல் வழிகாட்டியாக அமைத்துள்ளது.