நெஞ்சில் இருக்கும் அன்பு தான் காதலாகவும், பக்தியாகவும் மலர்கிறது என்ற மேலான புரிதலைத் தரும் நுால். கலியுகத்தில் கடவுளின் அவதாரம் நிகழுமா என்ற கேள்விக்கு பதிலாக இறைவியே ஒரு கதாபாத்திரமாக மலர்ந்து உரையாடுகிறாள்.
சிவா -– தயாவின் காதல் கதை என்ற அடிப்படை நுாலில் பலவிதமான கதைகள் கோர்க்கப்பட்ட கதம்ப மாலையாக இருக்கிறது. காதல் என்பது உடல் அழகு சார்ந்ததல்ல. மாறாக, அகத்தில் உள்ள அன்பிலே உறைந்துள்ளது என்பதை சிவாவும், தயாவும் முன்னின்று முழங்குகின்றனர்.
தற்கொலைக்கு முயன்ற இரு மனங்களை வாழ்வாங்கு வாழ வைக்கும் மருத்துவர் மாதவனின் அன்பில் மனம் கரைகிறது. ஒவ்வொரு கதாபாத்திரமும் அன்பின் விலாசமாக இருப்பதால் வாசகர்களின் மனதையும் அன்பின் வழியில் வழிநடத்திச் செல்லும் வல்லமை கொண்டதாக மிளிர்கிறது.
தீமையின் மொத்த உருவம் கூட, துாய அன்பினால் உருமாறி விடும் அற்புதத்தைச் சுட்டிக்காட்டுவதால், தீயவர்களுக்கும் முடிந்தவரையில் நன்மை செய்ய வேண்டும் என்ற புரிதல் பிறக்கிறது. தன்னலம் இல்லாமல் செய்யப்படும் பிராத்தனைகள் துல்லியமாகவும் சில சமயங்களில் இரட்டிப்பாகவும் நிறைவேறும் என்பது பல இடங்களில் அழுத்தமாக வெளிப்படுகிறது.
அடுத்ததாக, புற்றுநோய் ஏற்பட, வெளிப்படுத்த முடியாத வருத்தமும் காரணமாக இருக்கலாம் என்ற கருத்தை முன்வைத்து, பொருத்தமான நிகழ்வுகளைக் கூறுவது கதையின் உயிரோட்டத்தில் முக்கியப் பங்காக இருக்கிறது.
இதில் வில்லன்களை எதிர்த்துப் போராடும் சாதாரண கதைக்களம் இல்லை; மாறாக புற்றுநோயின் பாதிப்பை அன்பினால் வெல்ல முயற்சிக்கும் அற்புத கதைக்களம்.
கதாபாத்திரங்களிடம் உற்பத்தியாகும் அன்பு, வாசகர்களின் மனதில் நிறைந்துவிடும். எந்த ஒரு இடத்திலும் தேக்கம் ஏற்படாத வகையில், கதை அமைப்பும் உரையாடல்களும் உள்ளது. வாசகர்களின் மனதிற்கு புதுமையான அனுபவத்தைத் தர வல்ல நுால்.
– -தி.க.நேத்ரா