‘அன்பு, கருணை, இரக்கம்’ இவற்றின் ஜீவ ஊற்றுக்களான பெண்கள் தெய்வங்களாக மதிக்கப்பட வேண்டியவர்கள்; தெய்வங்களாகத் துதிக்கப்பட வேண்டியவர்கள்.
ஆனால், பெண் வாணிகப் பொருளாக இன்று மாற்றப்பட்டுள்ளாள் என்பதை ராஜம் கிருஷ்ணன் கவலையுடன் சுட்டிக்காட்டுவார்.
‘பெண்மையின் ஆற்றல் பெருமளவில் வெறும் வியாபாரக் கவர்ச்சிக்காகப் பயன்படுத்தப் பெறுவது வருந்தத்தக்க உண்மை’ என்பார்.
தமிழ் எழுத்துகளிலேயே அதிக மாக பெண்ணியம் பற்றிச் சிந்தித்தவர், ராஜம் கிருஷ்ணன். சுருக்கமாகச் சொன்னால் பெண் விடுதலை பற்றி எல்லா நாவல்களிலுமே அவர் பேசுகிறார்.
அவர் படைத்துள்ள பெண் கதாபாத்திரங்கள் அனைத்துமே பெண் விடுதலைக்காகக் குரல் கொடுப்போர் ஆவர். பெண்ணியம் பற்றிய அவரது கருத்துகள் தெளிவானவை, துணிச்சல் மிகுந்தவை!
ராஜம் கிருஷ்ணன் (1925 – 2014) முசிறியில் பிறந்தவர். ஏராளமான நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் ஆகியவற்றுக்குச் சொந்தக்காரர். ‘பெண் குரல்’ இவரைப் பிரபலப்படுத்திய நாவல்.
‘வேருக்கு நீர்’ நாவலுக்காக, 1973ம் ஆண்டு சாகித்திய அகாடமி விருது பெற்றார்.
ராஜம் கிருஷ்ணனின் இலக்கிய சாதனைகளைக் குறித்து சிறப்பாக எழுதியுள்ள தோதாத்ரி ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர். நல்ல நுால்.
– எஸ்.குரு