திருவள்ளுவர் பிறந்து வாழ்ந்த இடம் குறித்த சர்ச்சை நீடிக்கிறது. அவர் சென்னை மயிலாப்பூரில் நெசவு தொழில் செய்து வாழ்ந்தார் என்று பலரும் எழுதியுள்ளனர். தமிழக சமணர்கள், திருவள்ளுவரை சமணர் என்றும் அவர் வாழ்ந்தது பொன்னூர் மலை என்று கூறிவருகின்றனர். இந்நிலையில், சிவ.பத்மநாபன் கன்னியாகுமரி மாவட்டம், கல்குளம் தாலுகா, முட்டம் கடற்கரைக்கு அருகிலுள்ள திருநயினார்க்குறிச்சியில் வள்ளுவர் வாழ்ந்தார் என்று எழுதியும் பேசியும் வந்தார். திருக்குறளில் ஈடுபாடு கொண்ட அப்துல் கலாம், 2009, மே, 25ம் தேதி, ‘தினமலர்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியில், ‘திருவள்ளுவர் மயிலாப்பூரில் பிறந்தாரா;
குமரியில் பிறந்தாரா என்று ஆய்வு செய்யவேண்டும்’ என கருத்து தெரிவித்தார். அதை ஏற்று, நூலாசிரியர் ஆய்வு மேற்கொண்டார். அதில், நாஞ்சில் நாட்டில், தோவாளை வட்டம், பாண்டிபுரம், கடுக்கரை ஊர்களுக்கு இடையே உள்ள திருமடவிளாகம் குறத்தியறையே வள்ளுவர் பிறந்த இடம் என்ற முடிவுக்கு வந்துள்ளார். அதற்கான தரவுகளாக, நூல்களையும், தொல்லியல் சான்றுகளையும், தான் மேற்கொண்ட கள ஆய்வுகளையும் முன்வைக்கிறார், நூலாசிரியர்.
திருநின்றவூர் ரவிக்குமார்