விக்கிரமன் பதிப்பகம், 3, ஜெயசங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. (பக்கம்: 752+32)
விக்கிரமன், பிரபலமான சரித்திர நாவலாசிரியர். அரை நூற்றாண்டுக் காலம் `அமுத சுரபி' இலக்கிய மாத இதழின் ஆசிரியராக இருந்தவர். தற்போது `இலக்கியப் பீடம்' மாத இதழை நடத்துவதோடு, தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகவும் இருக்கிறார். இவர் 1942ம் ஆண்டு துவங்கி, 2002ம் ஆண்டு முடிய அறுபது ஆண்டுகளில் அவ்வப்போது எழுதிய சமூகச் சிறுகதைகளின் தொகுப்பு நூலாக இது வெளிவந்துள்ளது. இந்நூலைப் பற்றி டாக்டர் சிலம்பொலி செல்லப்பன் அருமையான ஆய்வுரை ஒன்று எழுதி, விக்கிரமனுக்கு `சிறுகதைச் சேக்கிழார்' என்று விருதும் சூட்டியுள்ளார்.
இத்தொகுப்பில் உள்ள 70 சிறுகதைகளுக்கும், தனித்தனியே பிரபல எழுத்தாளர்கள் எழுபது பேர் அறிமுக உரை எழுதியுள்ளனர். இது ஒரு தனிச் சிறப்பு எனலாம்.
தொகுப்பில் உள்ள `அழகின் நிறம்,' `வாணக்காரன்,' `நல்லதோர் வீணை' போன்ற பல கதைகள் விக்கிரமனின் சிறந்த சமூகப் பார்வைக்கு எடுத்துக்காட்டாகத் திகழ்கின்றன. விரசமில்லாமல் ஆழ்ந்த மனித நேயத்தைச் சித்திரிக்கின்றன ஒவ்வொரு கதையும். இளம் இலக்கியப் படைப்பாளிகளுக்கு கதை சொல்லும் உத்தி கதைக்களம் தேர்ந்தெடுக்கும் முறை, கலாசாரம் - பண்பாடுகளின் அடித்தளம் போன்ற நுட்பங்களை அறிய உதவும் அருமையான வழிகாட்டி நூலாகவும் இத்தொகுப்பு அமைந்துள்ளது கூடுதல் சிறப்பு எனலாம்.