கண்முன் விஸ்வரூப தரிசனம் தருகிறான் இறைவன்!
திருவடி முதல் திருமுடி வரை அங்குலம் அங்குலமாக ரசித்து, மெய்மறந்து கிடக்கிறான் பக்தன்!
பார்த்துப் பார்த்து தீரவில்லை அவனுக்கு!
பொறுமை போய்விடுகிறது பகவானுக்கு.
'என்னப்பா! இன்னுமா என்னை தரிசித்து ஆகவில்லை?' என்கிறார்.
'என்ன செய்வேன் இறைவா! உனது திருவடியைத் தரிசித்ததுமே,மார்கண்டேயனுக்காக நீ எமனை எட்டி உதைத்தது நினைவுக்கு வருகிறது. கல்லான அகலிகையின் சாபவிமோசனம் கண்முன் வந்து நெகிழவைக்கிறது!
திருமுடியைப் பார்த்தாலோ, பகீரதனுக்காக கங்கையைத் தலையில் தாங்கிய தங்களது கருணை - மனத்தைக் கசிய வைக்கிறது!' என்று உருகிப் போகிறான்.
இந்த நூலும் அப்படித்தான்! பிரபஞ்ச நாயகனான இறைவனது திரு அங்கங்கள் ஒவ்வொன்றுக்குமான சிலிர்ப்பூட்டும் கதைகளை - இதிகாச, புராண காவியங்களிலிருந்து சுவைபட எடுத்து அமுதம் போல் ஊட்டிவிடுகிறது. ரசித்துப் பருகுங்கள்.
சூடு பறக்கும் இந்நூலை, நாம் புரட்டத் தொடங்கலாமா?