நவ இந்தியா பதிப்பகம், 756, ஈ.வெ.ரா., பெரியார் நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம், சென்னை 600 010. பக்கம்: 496. (பெரிய அளவில்)
பெருந்தலைவர் காமராஜர், தமிழகம் இந்தியத் திருநாட்டிற்கு வழங்கிய அருங்கொடை. எளிய குடும்பத்தில் பிறந்து தொடக்கக் கல்வி மட்டுமே கற்று, பொது வாழ்வைத் தொடங்கிய அவர் தம் தேசத் தொண்டு, கடும் உழைப்பு, தன்னலம் கருதாமை, எளிய மக்கள்பால் கொண்ட அக்கறை, நேர்மை, ஒழுக்கம் ஆகிய பண்புகளால் உலக அரங்கில் உயர்வு பெற்றார்.
பெருந்தலைவரைப் பற்றிப் பல நூல்கள் வந்துள்ளன. ஆயினும், இத்துணை அழகாக, ஆழமாக, நுட்பமாக, நேர்த்தியாக வேறு ஒன்றும் இல்லை எனும் சிறப்புமிக்கதாக இந்நூல் இலங்குகிறது. கனமான அட்டை, கர்மவீரரின் கம்பீரமான காட்சியோடு. புரட்டினால் பக்கத்திற்குப் பக்கம் அரிய ஒளிப்படங்கள்; விடுதலைப் போராட்ட காலத்தவை, ஆட்சிப் பொறுப்பில் இல்லாமல் அகில இந்தியத் தலைவராக இருந்த காலத்தவை என, எல்லாக் காலத்தும் நிகழ்ந்தவற்றை நினைவூட்டும் சிறப்பான படங்கள் அவை. இந்நூலுள் இருக்கும் படங்களில் இடம் பெறாத தலைவரே இல்லை எனலாம்; அத்தனை தலைவர்களோடும் காமராஜர் இருக்கிறார்.
குன்றமா கோடா தொடங்கி, தமிழகத்தின் பொற்காலம், காமராஜர் திட்டம், காங்கிரசில் பிளவு, அரசியல் திருப்பங்கள், காமராஜர் ஒரு புதிர், நீங்காத நினைவுகள் என நாற்பது அத்தியாயங்களில் பெருந்தலைவரின் பெருமைகளை,சாதனைகளை, போராட்டங்களை, சிந்தனைச் செழுமையை, செயல் தீரத்தை எல்லாம் படம் பிடித்துக் காட்டியுள்ளார் நூலாசிரியர்.
இவர் மறைந்த உடனே இவர் வசித்த வாடகை வீட்டை வீட்டின் சொந்தக்காரர் எடுத்துக் கொண்டார்.
இவர் பயன்படுத்தி வந்த காரை காங்கிரஸ் கட்சி எடுத்துக் கொண்டது.இவருடைய பெயரை மட்டும் வரலாறு எடுத்துக் கொண்டது, எனும் அரிய வாசகம் தனியே இடம் பெற்றுள்ளமை முத்திரை பதித்தாற்போல் உள்ளது.
தமிழகத்தின் அரசியல் வரலாற்றையும், பாரதத்தின் அரசியல் நிகழ்வுகளையும் இந்நூலைப் படித்து அறிவதோடு, நாம் காமராஜரின் ஆளுமைத் திறனை உணர்ந்து வியப்படைவது உறுதி. ஒரு நூலை இத்துணை அருமையாக வடிவமைப்பது என்பது மிக மிக அரிய செயல். அதை மிகச் சிறப்பாகச் செய்திருக்கின்றனர் பதிப்பகத்தார். தமிழக முதல்வர் அணிந்துரையும், கவியரசர் கண்ணதாசனின் தாலாட்டுக் கவிதையும் நூலுக்கு தனிச் சிறப்பு தருகின்றன. தமிழகத்தின் அனைத்து நூலகங்களிலும், பள்ளிகள், கல்லூரிகள் அனைத்திலும் இருக்க வேண்டிய நூல்.