விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
சிலரின் வாழ்க்கை வரலாற்றைப் படித்தால், அவருடைய பங்களிப்பு மட்டுமே வெளித் தெரியும். சிலருடைய வாழ்க்கையோ, சமூகம் அனைத்துக்குமே பயனளிக்கும் விதத்தில் தகவல் களஞ்சியமாகத் திகழும். குஷ்வந்த்சிங்கின் வாழ்க்கையும் வரலாறும் அத்தகையதுதான்!
நாடறிந்த பத்திரிகையாளராக, குசும்புகள் நிறைந்த எழுத்தாளராக, அரசியல் பின்புலம் கொண்டவராக, வழக்கறிஞராக என்று பல முகங்கள் கொண்டவர் குஷ்வந்த் சிங். சரித்திரத்தில் இடம்பெற்ற பல சம்பவங்களுக்கு சாட்சியாக இருப்பவர். பாகிஸ்தான் பிரிவினை, இந்தியாவின் 1975_ம் ஆண்டு எமர்ஜென்ஸி, சுதந்திரத்துக்குப் பிறகான இந்திய வெளியுறவுத் துறை சந்தித்த சவால்கள்... என குஷ்வந்த் எதிர்கொண்ட பல நிகழ்வுகள், இன்றைய தலைமுறைக்கு பாடங்களைச் சொல்கிறது.
இந்த நூலில், குஷ்வந்த் சிங் வாழ்வில் நிகழ்ந்த பல சம்பவங்களை நகைச்சுவை தொனிக்க, சுவாரஸ்யமாகத் தொகுத்திருக்கிறார் நூலாசிரியர் பா.முருகானந்தம். கடமைகளை முடித்த ஒரு மனிதனாக நின்றுகொண்டு, தன் வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் பாணியில் சம்பவங்களைத் தொகுத்துள்ள பாங்கு, வாசிக்கும் ஆவலை ‘விறுவிறு’வெனக் கூட்டுகிறது.
இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, மேனகா ஆகியோருடன் குஷ்வந்துக்கு இருந்த பழக்கம், நேரு அமைச்சரவையில் இருந்த மேனனுடன் குஷ்வந்துக்கு இருந்த உறவு என தனிப்பட்ட மனிதர்களின் விருப்பு வெறுப்புகளையும் இதன் மூலம் அறியலாம்.
குஷ்வந்த் எழுதிய பிரபல நூலான ‘டிரெய்ன் டூ பாகிஸ்தான்’ மற்றும் ‘தி சீக்’ நூல்களின் பின்னணி, நம்மை மலைக்க வைக்கிறது.