விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
உலகில் தோன்றியுள்ளவற்றில் மிகப் பெரிய, அற்புதமான உயிரினம் யானை! இந்திய மனங்களில் அதற்கு ஒரு தனியான இடம் என்றைக்கும் உண்டு. அதிலும் குறிப்பாக கேரளத்தில் அது பெற்றிருக்கும் இடம் எல்லாவற்றையும்விட உயர்வானது.
மாப்ளா கலகத்தின்போது கலவரக்காரர்களால் சிறைப் பிடிக்கப்பட்டதில் ஆரம்பித்து கஜராஜனாக குருவாயூர் கோயிலில் மரித்த _ மன்னிக்கவும், சரிந்த _ நிமிடம் வரையிலான அதன் வாழ்க்கையை நுட்பமாகவும் அற்புதமாகவும் விவரித்திருக்கிறார் நூலாசிரியர் உண்ணிகிருஷ்ணன் புதூர்.
குருவாயூர் கேசவன் வெறும் கோயில் யானை அல்ல. பெரும்பாலான கேரளீயருக்கு அது குருவாயூரப்பனின் இன்னோர் அவதாரமே! கேசவனும் யானைகளிலேயே உயர்வான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து மறைந்திருக்கிறது. குருவாயூர் கோயிலில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியைக் கழித்த கேசவனது வரலாறை நூலாசிரியர் உணர்வுபூர்வமாக விவரிக்கிறது.
மதம் இளகிய நிலையிலும்கூட எந்தவொரு உயிருக்கும் சிறு தீங்குகூடச் செய்யாமல், மரம் அறுக்கும் இடத்தில் இருந்து குருவாயூர் கோயிலுக்கு நடந்தே வந்து சேர்ந்திருக்கிறது கேசவன்! உன்னை நம்பி வந்த என்னை நீ இப்படிச் சோதிக்கலாமா? என்று கேட்பதுபோல் கோயிலுக்குள் முரண்டு பிடித்துச் சுற்றியிருக்கிறது.
இன்னொரு முறை மதம்பிடித்து ஊருக்குள் நுழைந்தது. திடீரென்று யானை எதிரில் வந்ததும் மிரண்டுபோன குழந்தைகளைப் பார்த்ததும் சாதுவாக, நான் உங்களை ஒன்றும் செய்ய மாட்டேன் என்பதுபோல் ஒரு சுவரோரமாக ஒதுங்கி நின்று வழிவிட்டிருக்கிறது. அப்படி கேசவன் வழிவிட்டு ஒதுங்கி நின்றதைக் கண்ணால் கண்ட சிறுவர்களில் இந்த நூலாசிரியரும் ஒருவர்!
வாழ்நாள் முழுவதும் வாழ்வாங்கு வாழ்ந்து சரிந்திருக்கும் குருவாயூர் கேசவனை மலையாள எழுத்தாளர் உண்ணிக் கிருஷ்ணன் புதூர் மிகவும் அற்புதமாக வார்த்தைகளில் உயிர்த்தெழச் செய்து, என்றென்றைக்குமாக அதை நித்தியத்துவப்படுத்தியிருக்கிறார். மலையாள வாசனை துளியும் கெடாமல் அதே நேரம் தமிழர்கள் சரளமாகப் படித்து உள்வாங்கிக் கொள்ளும் விதத்தில் சிவன் மொழிபெயர்த்திருக்கிறார்.