விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை- 600 002; போன்: 044- 4263 4383- 84
கீதை _ குறள் இரண்டுமே நம் இரு கண்களாகத் திகழ்பவை. வரலாற்றின்படி பார்த்தால், ஐயாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட கீதைக் கருத்துகளும், கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருட பழைமையான குறள் கருத்துகளும், தர்மத்தின்படி நடக்கும் வாழ்க்கைக்கான அறநெறியை மையமாகக் கொண்டவை.
பகவத் கீதையைத் தந்த கண்ணன் இறைவனாக வணங்கப்படுகிறார். குறள் தந்த வள்ளுவர் திருவள்ளுவ நாயனாராகப் போற்றி வணங்கப்படுகிறார். கீதை _ கடவுள் மனிதனுக்குச் சொன்னது; குறள் _ மனிதன் மனிதனுக்குச் சொன்னது... _ இப்படி சில கருத்துகள் இந்த இரண்டு நூல்களையும் நம் இரு அறிவுப் பொக்கிஷங்களாகக் காணும் நோக்கை அளித்துள்ளன.
சுவாமி ஓங்காரானந்தர் தமிழிலும் சமஸ்க்ருதத்திலும் நல்ல புலமை பெற்றவர். தன்னுடைய எளிமையான சொற்பொழிவுகள் மூலம் மக்களிடம் நல்ல கருத்துகளைப் பரப்பி வருகிறார். முன்னோர் அறிவுச் செல்வங்களை, அடுத்த தலைமுறை உள்ளங்களில் ஆழமாகப் பதியவைக்கும் வல்லமை சுவாமி ஓங்காரானந்தருக்கு உண்டு. அவர் திருக்குறளையும் பகவத் கீதையையும் ஒப்பிட்டு பல ஆன்மிக அரங்குகளில் தன் வலுவான கருத்துகளால் இளையோர் உள்ளங்களை வசீகரித்துள்ளார்.
இந்த நூலில் திருக்குறள், பகவத் கீதை விளக்கங்கள் மட்டுமல்லாது, தாயுமானவர், திருமூலர், பட்டினத்தார் மற்றும் திருநாவுக்கரசர் போன்றோரின் பாடல்களும் அவற்றுக்கான வாழ்க்கைக் கருத்துகளும் விரவிக் கிடக்கின்றன. சில குறட்பாக்களை இவர் வித்தியாசமான கோணத்தில் பார்த்து விளக்கங்களைத் தந்திருக்கிறார்.
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க்கல்லால்... குறட்பாவின் விளக்கமும், பிறவிப் பெருங்கடல் நீந்துவர்... குறட்பாவின் விளக்கமும் சுவாமி ஓங்காரானந்தருக்கே உரிய தனி பாணி என்று தோன்றுகிறது.
அவருடைய இந்த நூலில் ஒப்பீட்டுக் கருத்துகளும், கடவுள் நம்பிக்கை குறித்த ஆணித்தரமான கருத்துகளும் நிறைந்துள்ளன.
இன்றைய அவசர உலகில் மன அமைதியற்று உழல்வோருக்கு இந்நூல், நிச்சயம் மன அமைதியைத் தருவதோடு, வாழ்க்கையை ஒரு கலையாக நோக்கும் நல்ல மனத்தையும் வளர்க்க உதவும்.