பாரதி புத்தகாலயம், 7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை-600 018. (பக்கம்:160)
"அரசியல் அங்கதச் சிறுகதைகள் என மேலட்டையிலே குறிப்பிடப்பட்டுள்ள இந்தச் சிறுகதைத் தொகுப்பில், இருபது சிறுகதைகள் உள்ளன. நாற்பதுக்கு மேற்பட்ட நூல்கள் எழுதியுள்ள நூலாசிரியரின் பலம், எளிய தமிழ்நடையும் உரத்த சிந்தனையும், தன்னைப் பாதிக்கும் புற நிகழ்வுகளை, "ரௌத்ரம் பழகு என்ற பாரதியின் அறவுரைக்கேற்ப எழுத்தில் வடித்துப் பதிவு செய்வதில் இவருக்கு உள்ள ஆர்வத்தை, இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் நமக்குத் தெரியப்படுத்துகின்றன.கதைகளுக்கு இவர் தேர்வு செய்துள்ள "கரு எல்லாருக்கும் நன்கு தெரிந்த, பொது வாழ்வில் உள்ள தன்னலச் சுரண்டல்வாதிகள் தான். ஆனால், நகைச்சுவையும் எள்ளலும் அங்கதமும் கலந்து அவர் எழுதியுள்ள, "பாங்கு வாசகனை நிமிர்ந்து அமர்ந்து ரசிக்க வைக்கிறது.புதுமைப் பித்தனும் விந்தனும் லேசாகத் தொட்டு விட்டுப் போன அரசியல் நையாண்டியை நடராஜன் பலமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறார். இது போன்ற படைப்புக்கள், சிறுகதை வாசிப்புத் தளத்தை விசாலமாக்கும் என்ற நம்பிக்கையை, இந்த "தொகுப்பு ஏற்படுத்துகிறது.