நிவேதிதா பதிப்பகம், 4/8 முதல் தளம், முத்துகிருஷ்ணன் தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்:368).
தமிழ்ச் சிறுகதை, நாவல் இலக்கியம் 1950-60 ஆண்டுகளில் புத்தெழுச்சியுடன் வார, மாத இதழ்களில் பவனி வந்தது. சமூகப் பிரக்ஞையும், சமுதாயப் பிரச்னையும், உரத்த சிந்தனையுடன் இலக்கியத்தில் பதிவு செய்யப்பட்ட காலம் அது. அந்த கால கட்டத்தில் தமிழில் படைப்பாளியாகத் திகழ்ந்தவர்களுள் முக்கியமானவர், அமரர் ஆர்வி. "அணையா விளக்கு என்ற புதினம் ஜாதி வெறியை எதிர்த்துக் குரல் கொடுத்த புரட்சி நாவல். அதே போல சிறுகதைகள், சிறுவர் இலக்கியம் ஆகிய துறைகளிலும் தனது எழுத்துக்களால் முத்திரை பதித்த எழுத்தாளர், "ஆர்வி எனும் ஆர்.வெங்கட்ராமன். ஒருங்கிணைந்த அன்றைய தஞ்சை மாவட்டத்துக்காரரான இவர் எழுத்தில், பசுமையும் ஈரமும், பன்னீர் புகையிலையின் வாசமும் தென்படும்.அவருடைய சிறந்த சிறுகதைகளுள் முதல் தொகுப்பாக வெளியிடப்பட்டுள்ள இந்த தொகுதியில் 26 அருமையான கதைகள் இடம் பெற்றுள்ளன. கதை வெளியான இதழ், மாதம், வருடம், தேதியை அடிக்குறிப்பில் சேர்ப்பது நூலுக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும்.