ஓர் கூர்நோக்கு என, ஓசையின்பம் கருதிப் பெயர் வைத்தனர் போலும். (உயிரெழுத்தை முதலாகக் கொண்ட சொல்முன் ஓர் வரும்) தமிழ்க் காப்பியங்கள் பற்றிக் குறிப்பிட்டு, அவற்றுள் சீவக சிந்தாமணி பெற்றுள்ள சிறப்புக்களை புலப்படுத்துவதே நூலின் நோக்கம். சீவகன் வாழ்வியல் எனும் தலைப்பில் சீவக சிந்தாமணியின் கதைச் சுருக்கம் எழுதப்பட்டுள்ளது. கட்டியங்காரனின் சதி பற்றி விளக்கமாக எழுதி, அறிவுரைகளையும் வழங்கியுள்ளனர் ஆசிரியர்கள்.
சங்க இலக்கியம், திருக்குறள், கம்ப ராமாயணம், திருமந்திரம் போன்ற நூல்களிலிருந்து மேற்கோள்கள் தரப்பட்டுள்ளன. பாத்திரங்களின் தன்மை, படைப்புத்திறம், காப்பிய
இன்பம் எல்லாம் கலந்து வருமாறு நூல் எழுதப்பட்டுள்ளது.
திரும்பத் திரும்பக் கதை சொல்லப்படுவதைத் தவிர்த்திருக்கலாம். சீவகசிந்தாமணி படிக்க இயலாதவர்கள் இந்நூலைப் படித்து இன்புறலாம்.
கவிக்கோ ஞானச்செல்வன்