பரந்து விரிந்திருந்த முகலாய சாம்ராஜ்யத்தின் சிம்மாசனத்தை, கைப்பற்ற ஷாஜஹான் மிகக் கடுமையாகப் போரிட்டு, ஈவிரக்கமில்லாமல், தன் சொந்த சகோதரர்கள், உடன் பிறவா சகோதரர்கள் மற்றும் மருமகன்கள் என்று, எல்லாரையும் வெட்டிக் கொலை செய்து விட்டு, முடி சூட்டிக் கொள்கிறார்.
காதல் மனைவி மும்தாஜ் உடன்கூடிக் களித்து, பதினான்கு குழந்தைகளைப் பெறுகிறான். நாவல் ஆரம்பத்திலேயே மும்தாஜ், தன், 38 வயதில் பதினாலாவது குழந்தையை பெற்று விட்டு இறந்து போகிறாள். தந்தையை கவனித்துக் கொள்வதிலிருந்து, அந்தப்புரத்தை நிர்வகிக்கும் பொறுப்பு வரை, மூத்தமகள் ஜஹனராவிற்கும், இரண்டாவது புதல்வி ரோஷனாவிற்கும் ஏகப் போட்டி. ஜஹனராவே வெல்கிறாள்.
ஷாஜஹானின் மகன் அவுரங்கசீப், தன் தந்தை எப்படி அரியணையைக் கைப்பற்றுகிறாரோ, அதே போல் தானும், தன் சகோதரர்கள் அனைவரையும் தீர்த்துக் கட்டி விட்டு முடி சூட்டிக் கொள்கிறார். தந்தையை கொல்லவில்லை. மாறாக, சிறை வைக்கிறார். தாஜ்மகால் உருவான விதம் மிக விரிவாக அழகாக, சொல்லப்பட்டுள்ளது. தமிழாக்கம் ஒரே சீராக, தங்கு தடையின்றிக் செல்கிறது. சரித்திர நாவல் பிரியர்கள் தவற விட்டு விடக் கூடாத நாவல்.
மயில் சிவா