இசைத் துறையில் தனக்கென முத்திரை பதித்த, சுதா ரகுநாதன் பற்றிய அழகான வண்ணப்புத்தகம். ‘காபி டேபிள் புக்’ என்ற முறையில், சிறப்பான தகவல்கள் மற்றும் வண்ணப்படங்களுடன் தயாரிக்கப்பட்ட புத்தகம்.
சுருதி, லயத்தின் சிறப்புகளை அறிந்து கொண்டு, குரு எம்.எல்.வி., தயாரிப்பில், இன்று பல்வேறு விருதுகள் பெற்று, கர்நாடக இசையில் தனக்கென, ஒரு சிறப்பான இடம் பெற்றவர் சுதா.
புத்தக முன்னுரையில் சிறந்த சினிமா டைரக்டர் கே.பாலசந்தர், ‘இப்புத்தகம் பாடாது: ஆனால், எல்லா விஷயங்களையும் பேசுகிறது. இளம்பெண் சுதாவாக இருந்தது முதல், இசையின் உருவாக இன்று காட்சியளிக்கும் அவரை படம் பிடிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளதை உணர முடிகிறது. புகழ் பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் குறித்த, ‘காபி டேபிள் புக்’ தயாரிப்பிற்கு பின், சங்கீத கலாநிதியான சுதா குறித்து வண்ணப்படங்களுடன் இப்புத்தகம் தயாரிக்கப்பட்டது என்று புத்தக ஆசிரியர் டி.செல்வகுமார் தெரிவித்திருக்கிறார்.
பரம்பரை, கலாசாரம், மரபு ஆகியவற்றை நவீன காலத்தில் வெளிப்படுத்தும் சுதா, திருமணம் செய்து கொள்ளும் முன், அவர் கணவர் ரகுநாதனை, தன் குரு, குரு எம்.எல்.வி.,யிடம் அழைத்து சென்ற போது, அவர் கூறிய வாசகங்கள், இதில் உள்ளன. சுதாவின் உயரிய கனவுகளும், அவர் வாழ்க்கைப்பாதையின் சிறப்புகளும் என, பல பரிமாணங்களை இந்த நூல் படம் பிடிக்கிறது. போத்தீஸ் பட்டு ஆடைகளில், சிறந்த ஆபரணங்களுடன், இசையை வளர்க்கும் உணர்வுகளில் சுதாவின் வண்ணப்படங்களையும், அவற்றுடன் சிறந்த தகவல்களையும் இப்புத்தகத்தில் காணலாம்.
பாரம்பரிய மரபுகளைப் போற்றும் அமைப்புகள் இப்புத்தகத்தை வைத்துக் கொண்டால், இதை அங்கு வந்து புரட்டும் வாசகர்கள் பலரும், கர்நாடக இசையின் பரிமாணங்களை நுகரலாம்.