இருநூறு ஆண்டுகளுக்கு முன்தோன்றி, சங்கீத நாதயோகத்தால் ஸ்ரீராமனை நேரில் தரிசித்தவர் சங்கீத நாதயோக சற்குரு தியாகராஜ சுவாமிகள். ‘தியாகராஜர்’ செய்த பல்வேறு சாதனைகளையும், அவரது விரிவான வரலாற்றையும் இந்நூல் மிக அழகாக விளக்குகிறது.
‘தியாகராஜர்’ பற்றிய சில தகவல்கள் இந்நூலில் மாற்றி எழுதப்பட்டுள்ளன. உதாரணமாக, சில இடங்கள் இதோ: ‘திருக்கயிலையில் இறக்க முக்தி’ (காசியில்?);
‘முகில் நாடு’ (முலக), தியாகராஜரின் தாயார் ‘சாந்தாதேவி’ (சீதம்மா); பக்.15, 16. திருவையாற்றில் பாயும் ‘கொள்ளிடம்’ (வடவாறு) பக்.18.
தியாகராஜரின் கீர்த்தனைகளில் உள்ள சங்கீத ஞானமும், தத்துவ நயங்களும், பக்திப் பிரவாகமும் ‘தியாக பிரம்ம உபநிஷத்’ என்று இவரது படைப்புகள் போற்றப்படுவதை விரிவாக இந்த நூல் விளக்குகிறது.
அருமையான, 130 கீர்த்தனைகளையும், அதன் தமிழாக்கத்தையும் தந்துள்ளார். தியாகராஜரின் சரித்திரமும், சங்கீதமும் அடங்கிய, ‘நாத அமுத பேழை’ இந்த நூல்!
முனைவர் மா.கி.ரமணன்