எளிய நடையில் எழுதப் பெற்றுள்ள ஆங்கில நூல். 60 வயதைக் கடந்த மூத்த குடிமக்களுக்குப் பெரிதும் பயன் அளிக்கும் நூல். இந்திய அரசு பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றி, ஓய்வு பெற்றுள்ள நூலாசிரியர், 60 வயதிற்குப் பிறகு மக்கள் எதிர்நோக்கும் பிரச்னைகளை ஆராய்ந்து, துன்பமின்றி வாழ்வதற்கு எவ்வாறு திட்டமிடல் வேண்டும் என்பதை விளக்கியுள்ளார்.
பணி ஓய்வுக்கு முன்பே திட்டமிடல் நலம் பயக்கும். சும்மா இராமல், பயனுள்ள வகைகளில் என்னென்ன செய்யலாம்? எப்படி மகிழ்ச்சியாக வாழலாம்? சர்க்கரை நோய் போன்ற நோய்கள் வரும் முன்னரும், வந்த பின்பும் எப்படிப் பாதுகாத்துக் கொள்ளலாம்? பொருளாதாரத்தை எப்படித் திட்டமிடலாம்? இவ்வாறான வாழ்க்கை நிகழ்வுகள் பலவற்றுக்கும் விளக்கம் கூறி, நல்வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறார் நூலாசிரியர்.
பொழுதுபோக்கு தியானம், யோகா, மகிழ்ச்சியாய் வாழ 15 வழிமுறைகள், வருமான வரி விவரங்கள், நடைப்பயிற்சி, சுற்றுலா பற்றிய விவரங்கள், உயில் எழுதுதல் பற்றிய விவரங்கள் முதலான அனைத்தையும் அற்புதமாக, எளிமையாக விளக்கிக் கூறும் நூலாசிரியரைப் பாராட்டலாம். மூத்த குடிமக்களுக்கும் மற்றையோருக்கும் மிகப் பயனுள்ள நூல். எல்லாருமே வாங்கிப் படித்துப் பயன் பெறலாம்.
பேரா. ம.நா.சந்தானகிருஷ்ணன்