சித்தம் என்பது மனம். கடிவாளம் இல்லாத குதிரையைப் போல், கிளைக்குக் கிளை தாவிக் கொண்டே இருக்கும் குரங்கைப் போல், ஓய்ச்சல் ஒழிவே இல்லாமல் சதா அலைபாய்ந்து கொண்டிருக்கும் மனதை, தவம் எனும் பெருமுயற்சியால் தன்வயப்படுத்தியவர்களே, சித்தர்கள்.
சித்தர்களைப் பற்றிய புத்தகங்கள், சமீபத்தில் பெருமளவில் வந்துள்ளன. ஆனால் இந்த நூலில், ஆசிரியர் மிக முயன்று, அருளாளர்கள், ஞானிகள், சித்தர்கள் என்று, 200 பேர்களது வாழ்க்கை நிகழ்ச்சிகளை தொகுத்து, அவர்கள் ஜீவசமாதி கொண்டிருக்கும் இடங்கள் பற்றிய விவரங்களையும் தந்திருக்கிறார்.
தமிழகத்தின், 27 மாவட்டங்களன்றி, வெளி மாநிலங்களில் உள்ள சித்தர்கள் பற்றியும் மிக முயன்று விவரங்களை திரட்டி அளித்திருப்பது போற்றுதலுக்கு உரியது. சித்தர்கள் நமது நாட்டின் மட்டுமின்றி உலகின் எந்த மூலையிலும் தோன்றக்கூடும். இதை மெய்ப்பிக்கும் வண்ணம், ஆசிரியர் தேடிப்பிடித்து நமக்கு அளித்திருக்கும் ரமணகிரி சுவாமிகள் (குட்லாடம்பட்டி) வரலாறு நம்மைப் பிரமிப்பில்
ஆழ்த்திவிடும்.
ரமணகிரி சுவாமிகள் என்று அறியப்படும் இந்தச் சித்தரின் இயற்பெயர், அலெக்சாண்டர் வெஸ்டிலின். பிறந்தது, ஐரோப்பா கண்டத்தில் உள்ள ஸ்வீடன் நாட்டின் அரசு குடும்பத்தில், 1921, ஜூன், 19ம் தேதி. ஐந்து வயது சிறுவனாய் இருந்தபோது, 14 மாடிக் கட்டடத்தில் இருந்து தவறி விழுந்த இவரை, எங்கிருந்தோ வந்த ஒரு பறவை, ஐரோப்பா கண்டத்திலேயே காண முடியாத ஒரு பறவை, கீழே விழுந்து கொண்டிருந்த சிறுவனை, தன் முதுகில் தாங்கி, தரையில் இறக்கியதாம்.
அது, சிறுவன் மனதில் ஆழப்படிந்து, அந்தப் பறவையை எப்படியும் மீண்டும் காண வேண்டும் என்று விரும்பினான். அந்தச் சிறுவனுக்கு, சிறு வயதிலிருந்தே ஆன்மிகத்தில் நாட்டம். பல இடங்களில் கல்வி பயின்று, இந்தியாவுக்கு வந்து, நம் ஜனாதிபதி டாக்டர் ராதா கிருஷ்ணனிடம் கூடப் பாடம் பயின்றிருக்கிறார்.
பின்பு இமயமலைப் பக்கம் சென்று, பிறகு திருவண்ணாமலை வந்தபோது, அந்தப் பறவை, ஐந்து வயதில் அவரைக் காப்பாற்றியதே, அதேபோல் ஒரு பறவை அவர் கண்ணில் பட்டது. அதுதான் மயில்.
அந்த மயில் முன்னால் நடக்க, அதைப் பின் தொடர்ந்த இவர், அது ரமணமகரிஷியிடம் போய்ச்சேர, இவரும் ரமணரைக் கண்டிருக்கிறார். அவரிடம் மவுனதீட்சை பெற்று, ரமணகிரி சுவாமிகள் என்று அழைக்கப்பட்டார். இப்படி, பல சித்தர்கள் வாழ்ந்த இடங்கள், அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள், அவர்களைக் குருநாதராகப் போற்றி வணங்குபவர்களுக்கு கிடைக்கும் வாழ்வியல் வெற்றிகள் – இவற்றை ஒரு துப்பறியும் நவீனத்தைப் படிக்கும் பரபரப்பை உள்ளடக்கிய நடையில், சிறப்பாகத் தந்திருக்கிறார் நூலாசிரியர்.
சித்தர் இலக்கியத்தில் பற்று உள்ள அன்பர்களுக்கு இந்த நூல் ஒரு பெரும் பொக்கிஷம்.
கேசி