மலையாள எழுத்தாளர் சேது எழுதி, சாகித்ய அகாடமி விருது பெற்ற, ‘அடையாளங்கள்’ நாவலை தமிழில், மூல நூலை போன்றே சுவை குன்றாமல், மொழிபெயர்த்துள்ளார் குறிஞ்சிவேலன். புகழ்பெற்ற நிறுவனம் ஒன்றில், உயர் பதவியில் இருப்பவள் பிரியம்வதா; கணவனைப் பிரிந்தவள். அவளுடைய ஒரே செல்ல மகள், நவீன நாகரிக மோகம் கொண்ட நீது. தாய், மகளுக்கிடையே இருந்த பாசம், இருவரின் அந்தரங்க உணர்வுகளாலும் காயம்பட்டு, உறவில் விரிசல் ஏற்பட்டு, மன உளைச்சல், அமைதியின்மை உருவாகின்றன. அவை யாவும் உளவியல் நோக்கில் யதார்த்தமாகச் சித்தரிக்கப்பட்டு, சோகத்தைச் சுமந்த மகளை இலகுவாக அரவணைக்கும் தாயன்பின் அடையாளமாக, இப்புதினத்தை வெகு நயமாக மொழிபெயர்த்துள்ளார்.
ஒரு பிறவியில், முழு இன்ப துன்பங்களை, கறுப்பும், வெளுப்புமாக, தன் உடலிலேயே கொண்டு வாழும் பெங்குவின்கள் போல், ஏகாந்தமான பனிப் பிரதேசங்களில் தவம் செய்ய விதிக்கப்பட்ட குலத்தைச் சேர்ந்த தாயையும், அவளின் அருமை மகளின் பாசத்தையும் விலாசமாக விவரிக்கும் இந்த நாவலில், ‘உள்ளத்திற்குள் ஒரு பீடம் அமைத்து பிரதிஷ்டை செய்து, நெய் விளக்கு ஏற்றி வைத்து, தினந்தோறும் கைகூப்பி தொழ வேண்டிய உருவம் அம்மா’ (பக். 25) என்று கூறும் மகள், தன் தாயைப் பற்றி வந்த மொட்டைக் கடிதங்களால், தாயையே சந்தேகித்து, கேட்கக் கூடாத கேள்விகளை கேட்டு, தாயிடமிருந்து விலகத் துவங்குகிறாள்.
மனம் துன்புறும் போதெல்லாம் ஓடிச் சேரும் முதலிடமாக, நகரத்தின் மூலையில் உள்ள தேவி சேத்திரம் (பக். 40); இரண்டாவதாக, நூலகம் என்றிருந்தவள், பின் மதுவுக்கு அடிமையாகி, ‘ஒரு பிசாசின் உள்ளுக்குள் இன்னொரு பிசாசு’ (பக். 474) எனும் பரிதாப நிலைக்கு
தள்ளப்பட்டு, பலவீனமாகி, மனந்திருந்திய மகளாக தன் தாயின் அரவணைப்பை தேடுகிறாள். மகளின் நலனுக்காக பிரார்த்திக்கும் தாயாக, கனத்த இதயத்தோடு முற்றுப்பெறும் இந்தப் புதினத்தை, மலையாளத்தில் இருந்து, தமிழில் மொழிபெயர்த்து குறிஞ்சிவேலன் முத்திரை பதித்துள்ளார்.
பின்னலூரான்