வருங்காலத்தில், ‘காரா’ எனும் உலகத்தில் நடைபெறுவது போல் புனையப்பட்டிருக்கும் இந்த புதினத்தில், ஒருவனின் உள்சக்தியால் கட்டுப்படுத்தப்படும், ‘கான்ட்ராக்ட்’ எனப்படுவதைக் கொண்டு சட்டத்தை காப்பாற்றுவோருக்கும், அதைக்கொண்டு அழிப்போருக்கும் இடையே நடக்கும் போராட்டம் சித்தரிக்கப்பட்டுள்ளது.
‘வென்டோ’ எனும் கிராமத்தின் மீது, ‘டார்க் அலையன்ஸ்’ எனும் அழிவு கும்பல் நடத்திய தாக்குதலில், ‘சோரா’ எனும் எட்டு வயது சிறுவன் மட்டுமே உயிர் பிழைக்கிறான். அவனிடமிருந்த அபரிமிதமான உள்சக்தியை, தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த, ‘டார்க் அலையன்ஸ்’ முயல்கிறது.
ஆனால், அப்போது நடைபெறும் குழப்பத்தில், ‘சோரா’ மேலும் வலுப்பெறுகிறான். அவர்களிடமிருந்து காப்பாற்றப்பட்ட பின், ‘சோரா’வின் வாழ்வில் ஏற்படும் மாற்றங்கள், உருவாகும் நட்பு, நண்பர்களின் ஆதரவு, தன் உள்சக்தியை எப்படி கட்டுப்படுத்தி, கடுமையான பயிற்சியின் வழியே சாகசங்கள் நிகழ்த்துகிறான் என்பதை, விறுவிறுப்பாக விவரிக்கிறார் சாய் பிரபஞ்ச். உலகளாவிய கான்ட்ராக்டர்களுக்கு இடையே நடைபெறும், ‘ஹோலி டிராகன்’ பந்தயம், அதன் ஒவ்வொரு சுற்று, அதன் வர்ணனை, கான்ட்ராக்டர்கள் பயன்படுத்தும் வித்தை, நம்மை திகைக்க வைக்கின்றன.