இசை தொடர்பான தரமான கட்டுரைகளை வெளியிடுவதில், ‘சொல்வனம்’ இணைய இதழின் பங்கு மகத்தானது. இசைநுட்பம் குறித்த தேர்ந்த புரிதலும், அதை சுவாரசியமாகச் சொல்வதிலும் நேர்த்தி பெற்ற எழுத்தாளர் லலிதாராம். ‘லயம்’ என்ற தலைப்பில் சொல்வனத்தில், அவர் எழுதிய மிருதங்கம் தொடர்பான இசைக் கட்டுரைகளும், பழனி சுப்ரமணிய பிள்ளை குறித்த மேலும் பல அரிய விஷயங்களும் சேர்ந்து, உருவாகியிருக்கிறது இந்த புத்தகம்.
இது, பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கை வரலாறாக மட்டுமில்லாமல், மிருதங்கம் குறித்தும், மிருதங்கம் வாசிப்பதின் வழிகள் குறித்தும், புதுக்கோட்டை பாரம்பரியத்தின் வரலாறு குறித்தும் பேசுகிறது. பழனி சுப்ரமணிய பிள்ளையின் பங்களிப்பை முழுமையாக உணர, அவரது தனிப்பட்ட வாழ்க்கையும் வாசிப்பும் மட்டும் போதாது. அவர் வாசித்த வாத்தியம், அதன் வரலாறு, அவருக்கு முன்னால் மிருதங்கத் துறையில் இருந்த நிலை, அவர் வாசிப்பை பாதித்தவர்கள், அவரது சமகாலத்தினர் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போதுதான் முழுமையான பார்வை கிடைக்கும். இவற்றை எல்லாம் இந்த நூல் முழுமையாக பதிவு செய்திருக்கிறது. இந்த நூலுக்கான அடித்தளமாக, பிள்ளையுடன் நேரில் பழகியவர்களின் நேர்காணல்களே அமைந்துள்ளன.
விஜயலட்சுமி சிவகுமார்