இன்றைய நவீன தொழில்நுட்ப உலகில், நம் பாரம்பரிய மருத்துவ முறைகளின் கால்மாட்டில், விளக்கேற்றி வைத்து விட்டதால், ஆங்கில மருத்துவ முறைகள், அரியணையில் அமர்ந்து விட்டன. பெரும்பாலான பிரசவங்கள், அறுவை சிகிச்சையில் முடிகின்றன. அறுவை சிகிச்சை பிரசவங்கள் அதிகமானதற்கு, கூட்டுக் குடும்ப வாழ்வு சிதைந்ததும் ஒரு காரணம்.
இன்றைய நிலையில், மீண்டும், மரபு வழி மருத்துவ முறைகளின் மேல், கவனம் திரும்ப துவங்கி உள்ளது. ஊடகவியலாளர் கலாநிதி, மரபு வழி மருத்துவரின் வழிகாட்டுதலால், தன் மனைவிக்கு தானே சுகப்பிரசவம் செய்ததை, உயிர் உருக எழுதியுள்ளார்.
முன்னுரையில் நூலாசிரியர் எழுதியதை போல், ‘இது மருத்துவ நூலோ அல்லது ஆய்வு நூலோ அல்ல; ஒரு பெண்ணின் கணவனாக, ஒரு குழந்தையின் தகப்பனாக, 12 மாதங்களில் கண்டுணர்ந்த விஷயங்களின் அனுபவ தொகுப்பு’.
நூலாசிரியருக்கு ஆறு மாதமாக, உயிரே போய்விடும் அளவிற்கு கடும் இருமல். பல்வேறு அலோபதி மருந்துகளால் சரிப்படுத்த முடியாததால், தற்கொலை எண்ணமும் துளிர் விட்டிருக்கிறது. இறுதியில், மரபு வழி மருத்துவர் ஏங்கெல்ஸ்ராஜா மூலம், இரண்டு வாரத்தில் ஒட்டுமொத்த இருமலும் குணமானதை, முதல் அத்தியாயத்தில், கண்ணீர் வழிய எழுதி இருக்கிறார். இதிலிருந்து இயற்கை வழி மருத்துவத்தின் தேவை துவங்குகிறது.
தவிர்க்க முடியாத காரணங்களுக்காக, பிரசவத்தில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது என, அலோபதி மருத்துவமுறை கூறி வரும் நிலையில், அதை முன் வைத்து, பெரிய அளவிலான வர்த்தகம் நடந்து வருவதை, இந்நூல் வெளிச்சப்படுத்துகிறது. அதேநேரம், கிராமப்புறங்களில், 200 ரூபாய் செலவில், சுகப்பிரசவங்கள் நடந்து வருவதும் மேற்கோள் காட்டப்படுகிறது. பிரசவ அறுவை சிகிச்சையில் ஏற்படும் பின் விளைவுகள் குறித்தும், நூலில் விளக்கப்படுகிறது.
இயற்கை வழியில் குழந்தை பெற்றுக் கொள்ள பெற்றோர் விரும்பினால், கருவுறுதலுக்கு முன்னதாக செய்ய வேண்டிய செயல்பாடுகள் குறித்தும், நூலில் வழிகாட்டப்பட்டுள்ளது. குழந்தையை பெற்றெடுத்த சவீதா கலாநிதியும், தன் அனுபவத்தை பதிவு செய்திருக்கிறார்.
பிரசவத்தின் போது, கொடி சுற்றிக் கொண்ட குழந்தையை, அறுவை சிகிச்சை செய்து தான் எடுக்க வேண்டும் என்ற அலோபதி மருத்துவ முறையின் கோட்பாட்டை, இந்த நூல் தகர்த்துள்ளது. மரபு வழி மருத்துவத்தில், ஆர்வம் உள்ளோர், கட்டாயம் இந்த நூலை படிக்கலாம்.
– அ.ப.இராசா