அருட்செல்வர் நா.மகாலிங்கம், அமரராகி விட்டாலும், இந்த நூல் அவர் நம்முடன் அருகமர்ந்து உரையாடும் உணர்வை தோற்றுவிக்கிறது. சுபமங்களா, வாசுகி பத்திரிகைகளில் பல ஆண்டுகளுக்கு முன் வெளியான அவரது நேர்காணல்களையும், சென்னை வானொலி நிலைய, ‘நிலாமுற்றம்’ நிகழ்ச்சியில் அவர் பங்கேற்று உரையாடியதையும், அருட்செல்வரின் ‘அனுபவவெளி பாகம் – 1, பாகம் – 2’ என, அவருடன் உரையாடித் தொகுக்கப்பெற்ற செய்திகளையும் ஒன்று சேர்த்து, ‘ஓம் சக்தி’ மாத இதழின் ஆசிரியர் பெ.சிதம்பரநாதன், இந்த நூலாக உருவாக்கி உள்ளார்.
மிகச்சிறந்த தொழிலதிபராகவும், தேசிய தெய்வீக உணர்வுடையவராகவும், சிந்தனை வளம்மிக்க தமிழ்ச் சான்றோராகவும் திகழ்ந்த அருட்செல்வரின் அருங்குணச் சிறப்புகளையும், வாழ்க்கைச் சரிதத்தையும், வரலாற்று பதிவாக்கியுள்ள நூல் இது எனலாம்.
– கவுதம நீலாம்பரன்