நகரங்களில், மரங்களை காக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனமாக செயல்பட்டு வரும், ‘நிழல்’ அமைப்பு வெளியிட்ட, பொக்கிஷமான புத்தகம் இது. கட்டட காடாய் மாறிப் போன சென்னையில், ஆங்காங்கே, உயிர் பிழைத்திருக்கும் மரங்களைப் பற்றிய ஆவணமாக இந்த புத்தகம் விளங்குகிறது.
சென்னை நகரில் உள்ள, பழமையான மரங்கள், அரிய மரங்கள் மற்றும் வெளிநாட்டு மரங்களை பற்றி, அதிகளவு படங்களுடனும், அவற்றை பற்றிய குறிப்புகளுடனும், தரமான கட்டுமானத்தில் இந்த புத்தகம் வெளிவந்திருக்கிறது. அந்த மரங்கள், சென்னை ஐ.ஐ.டி., தியாசோபிகல் சொசைட்டி, கிண்டி பூங்கா மற்றும் சென்னை கிறித்தவ கல்லூரி ஆகிய இடங்களில் தான் உள்ளன.
இலவு, தான்றி, ஆலமரம், பனை, வேப்பமரம் உள்ளிட்ட, 40 வகையான மரங்கள், அவற்றின் பூ, இலை, கனி ஆகியவற்றின் படங்களுடன், விவரங்கள் தரப்பட்டிருக்கின்றன.
நூல் முன்னுரையில், ‘இதுவரை சென்னை, சிலைகளையே அடையாளக் குறிகளுக்குப் பயன்படுத்தி வந்தது. ஆனால் இனி, மரங்களை அடையாளக் குறிப்பீடுகளாக்கும் புதிய பண்பாட்டினை இந்த நூல் உருவாக்கும்’ என, முனைவர் து.நரசிம்மன் குறிப்பிட்டிருப்பது
சரியானதே! அப்படி நிகழ்ந்தால், அது ஆரோக்கியமானதே!
அடையாறு ஆலமரத்தின் கீழ் தான், புகழ்பெற்ற தத்துவமேதை ஜே.கிருஷ்ணமூர்த்தி மற்றும் அன்னிபெசன்ட் அம்மையார் ஆகியோர், தங்கள் சொற்பொழிவை நிகழ்த்தினர்.
சீமை வைரமரம், உலகத்திலேயே மகவும் வலிமையானதும், அடர்த்தியானதும் ஆகும். இதனாலேயே, கப்பல் கட்டும் தொழிலில், நீராவிக் கப்பல்களுக்கான உந்துவிசைக் கருவிகளைத் தயாரிக்க பயன்படுகிறது.
மகிழம் மரம் பற்றி, ‘பசுமை மாறா மகிழ மரத்தின் நட்சத்திர வடிவிலான, மஞ்சள் கலந்த வெண்ணிறப் பூக்கள், மார்ச் மாதம் முதல், ஜூலை மாதம் வரை, இரவு நேரத்தை நறுமணத்தால் நிரப்புகின்றன’ என்ற வர்ணிப்பின் போதே, அதனை நேரில் காணும் ஆர்வம் நமக்கு ஏற்படுகிறது.
புத்தகம் வெளியாவதற்குள், முக்கியமான மரங்கள் சில, வெட்டப்பட்டு விட்டன என்ற தகவல், வேதனையை தருகிறது.
இவ்வகை மரங்கள் இருக்கும் இடத்தைப் பற்றிய வேறு தகவல்கள் இருந்தால், இந்த தொண்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவியுங்கள்; கொஞ்சம் மரங்களையும் பாதுகாக்க முயற்சியுங்கள்.
அது தான், இந்த புத்தகத்தின் நோக்கம்!
சி.கலாதம்பி