சேக்கிழார் பெருமான் தாம் எழுதிய பெரியபுராணத்தில், திருக்குறளின் தாக்கத்தால், அதன் அறக்கருத்துகளை, அடியார்களின் வரலாற்றுடன், இரண்டற கலந்து, வழங்கியுள்ளார். பெரியபுராணம், சமய கருத்துகளை மட்டும் கூறவில்லை; சமுதாய நிலைகளையும், அரசியல் சூழ்நிலைகளையும் கூறுகிறது என்பதை, திருக்குறள் கூறும் சமுதாய, அரசியல் கருத்துகளுடன் ஒப்பிட்டு, ஆசிரியர் ஆய்வு செய்துள்ளார்.
‘தற்காத்து தற்கொண்டாற் பேணி’ என்று துவங்கும் திருக்குறளை, திருநீலகண்டர் வரலாற்றுடன் ஒப்பிடுவதும் (பக். 37); ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல்’ என்ற குறளை, இயற்பகை நாயனார் வரலாற்றுடன் விளக்குவதும், நூலாசிரியரின் ஆய்வு திறனுக்கு எடுத்துக்காட்டுகளாக உள்ளன. புனிதவதியார் (காரைக்கால் அம்மையார்) வரலாற்றில், அவர்தம் கணவர் அவரை விட்டு விலகியதும், இறைவனிடம் வேண்டி, பேய் வடிவம் பெற்றதை, சிலப்பதிகார பாடலுடன் ஒப்பிட்டு காட்டுகிறார், நூலாசிரியர்.
டாக்டர் கலியன் சம்பத்து