அறம்செய விரும்பு – (ஆத்திசூடி); அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம் – (கொன்றைவேந்தன்); நன்றி ஒருவர்க்குச் செய்தக்கால் அந்நன்றி என்று தருங்கொல் என வேண்டா... – மூதுரை; சாதி இரண்டொழிய வேறில்லை – நல்வழி. இப்படி அவ்வை இயற்றிய நான்கு நூல்களும், ‘எழுத்தறிவித்தவன் இறைவனாகும்’ எனும் அதிவீரராம பாண்டியர் எழுதிய வெற்றிவேற்கை (நறுந்தொகை), ‘ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டா’ என, உணர்த்தும் உலகநாதனாரின், ‘உலகநீதி, ‘மாசற்ற நெஞ்சுடையார் வன்சொல் இனிதே’ எனும், ‘நன்னெறி’ உணர்த்திய சிவப்பிரகாசர், ‘கல்வியின் ஊங்கில்லை சிற்றுயிர்க்கு உற்றுதுணை’ என்று ‘நீதிநெறிவிளக்கம்’ அளித்த குமரகுருபரர், சிறுசிறுகதைகள் மூலம் நீதிநெறியூட்டும் நீதிவெண்பா, ‘ஆபத்திற்கு உதவாப்பிள்ளை, அரும்பசிக்கு உதவா அன்னம், தாபத்தைத் தீராத் தண்ணீர், தரித்திரம் அறியாப் பெண்டிர், கோபத்தை அடக்கா வேந்தன், குருமொழி கொள்ளாச் சீடன், பாபத்தைத் தீராத் தீர்த்தம், பயனில்லை ஏழும் தானே’ எனும், ‘விவேக சிந்தாமணி’ இப்படிப்பட்ட நீதி நூல்களின் பாடல்களுக்கு விளக்கம் இதில் உள்ளன.
மேலும், பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில், நாலடியார், நான்மணிக்கடிகை, இன்னாநாற்பது, இனியவை நாற்பது, சிறுபஞ்சமூலம், ஏலாதி போன்றவைகளும் இந்த நூலில் இணைக்கப்பட்டுள்ளன.
‘மாடில்லான் வாழ்வும் மதியிலான் வாணிகமும், நாடில்லான் செங்கோல் நடாத்துவதும் – கூடும், குரு இல்லா வித்தை, குணம் இல்லாப் பெண்டும், விருந்தில்லான் வீடும் விழல்’ (பக்.476) அறவே பயனில்லாத ஆறு விஷயங்கள் இவை. ‘இஞ்சி நெல்லி இலைக்கறி பாகற்காய், கஞ்சி வெண்தயிர் கங்குல் அருந்திடின், பொஞ்சு பூமகள் போயுடன் மூத்தவள், கொஞ்சிக் கொஞ்சிக் குலாவி நடிப்பாளே’ (507) என, உணவு முறையில் கூட ஒரு ஒழுங்கை போதித்துள்ள, நம் முன்னோரின் நூல்கள், இன்றைய தலைமுறையினருக்கு தெரியாமலேயே போய்விட்டன. பதினென் கீழ்க்கணக்கு வகையைச் சார்ந்தவற்றைத் தனி நூலாகவும், பிறவற்றைத் தனியாவும் பிரித்து, சிறு சிறு பகுதிகளாக வெளியிட்டிருந்தால் பொதுமக்கள் வாங்கிப் படிக்க இயலும். எனினும், உரையாசிரியர்களின் முயற்சி வரவேற்கத்தக்கது.
பின்னலூரான்