ஆங்கில நாவல்கள் குறித்து, ‘புத்தகம் பேசுது’ இதழில், நூலாசிரியர் எழுதிய கட்டுரைகள், தொகுப்பாக வெளிவந்துள்ளன.
‘திரில்லர்’ நாவல்களில் தனக்கென்று தனி இடம் பிடித்த, அமெரிக்க எழுத்தாளரான, ராபின் குக் எழுதிய முதல் நாவலே, சிறுநீரகத் திருட்டைப் பற்றிய, ‘கோமா’; அடுத்து, மருத்துவ துறையின் மோசடி குறித்து எழுதிய, ‘டெத் பெனிபிட்’ நாவல். கிரைட்டனின் கதைகளை விவரித்து, தமிழில் விஞ்ஞான கதைகள் ஏன் அதிகளவில் வரவில்லை என்ற, தன் ஆதங்கத்தையும் நூலாசிரியர் வெளிப்படுத்துகிறார்.
டான் பிரவுன் எழுதிய, ‘டா வின்சி கோட்’ நாவல் பற்றி விவரித்த ஆசிரியர், உண்மையும் கதையும் கலந்த நாவல்கள், இரண்டையும் விட சுவையானவை; துரதிர்ஷ்டவசமாக, தமிழில் இத்தகைய நூல்கள் இல்லை என, சுட்டிக் காட்டுகிறார்.
யதேச்சையாக வாங்கிய, ‘பாங்கிரப்ட்’ ஆங்கில நாவல், தன்னை முழுமூச்சில் படிக்க வைத்தது. அதை எழுதியவர், ரவி சுப்பிரமணியம் என்ற இந்தியர் என ஆச்சரியப்படுகிறார். தமிழில் நாவல்களின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தின் பிரதிபலிப்பு இந்த நூல்!
-சி.கலாதம்பி