மொழிபெயர்ப்பு என்பது, வானத்தை பிழிந்து வட்டியில் இறக்கும் வேலை என்பர். அதில், ஒரு துளி அளவேனும் சந்தேகம் இல்லை என்பதற்கு எடுத்துக்காட்டாக வெளிவந்துள்ளது, ‘எருது’ உலக சிறுகதைகள் தொகுப்பு. அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, சீனா உள்ளிட்ட, 10 நாட்டு எழுத்தாளர்களின் சிறுகதைகள், இதில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
ஒன்றுக்கு ஒன்று தொடர்பில்லாதவாறும், புதுப்புது களங்களும் உள்ள சிறுகதைகள், தேர்ந்தெடுத்து தொகுக்கப்பட்டுள்ளன.
எட்மண்டோ பாஸ் சோல்டன் (பொலிவியா), யூசுப் இதிரிஸ் (எகிப்து), ரைஸ் ஹியூக்ஸ் (வேல்ஸ்), அம்ப்ரோஸ் பியர்ஸ், டோனி மாரிசன் (அமெரிக்கா) போன்றோரின் சிறுகதைகள், இத்தொகுப்பின் வழியாக, தமிழுக்கு முதல் முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
அதனதன் அளவில் இதில் தொகுக்கப்பட்டுள்ள, 10 சிறுகதைகளும், தனித்துவத்தோடு இருக்கின்றன. அதிலும், நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர் மோ யான் எழுதிய, ‘எருது’ சிறுகதை குறிப்பிடத்தக்கது. எருது விற்பனை சந்தையில் நடக்கும் நிகழ்வுகளின் மூலம், அப்பாவுக்கும், மகனுக்குமான உள்மன உறவுகளின் மீது, வெளிச்சம் பாய்ச்சுகிறார்.
அவருடைய மொழிநடை, தமிழுக்கு புதியதொரு கதைச் சொல்லல் முறையை அறிமுகப்படுத்தி இருக்கிறது. காட்சிகளைக் காட்டிலும், விவரணைகள் மூலம் புதுப்புது காட்சிகளை காட்டுவது, படைப்பை மேலும் சுவாரசியப்படுத்துகிறது.
ஒன்றைக் கயிற்றில் நெடுந்தூரம் பயணிக்கும் ஆபத்து, மொழிபெயர்ப்பில் உள்ளது. மொழிபெயர்ப்பாளர் கார்த்திகைப் பாண்டியன், அதை சலனமின்றி கடந்திருக்கிறார். அந்த நேர்த்தியில், அவருக்குள் இருக்கும் புனைவாளனையும் கண்டுகொள்ள முடிகிறது.
நூல் ஆசிரியர்கள் பற்றிய குறிப்புகளில், அவர்களை பற்றி மேலோட்டமாக அணுகாமல், பல இடங்களில் விமர்சனத்தோடு அணுகியிருப்பது, புத்தகத்திற்கு கூடுதல் பலம் சேர்க்கிறது. நேரடி படைப்புகளுக்கு தரப்படும் ஓவியங்களை, மொழிபெயர்ப்புகளுக்கும் சேர்த்திருக்கலாம். ஒரே மூச்சில் மொத்த கதைகளையும் வாசித்து முடிக்கும்போது, தன்னை அறியும் பயணத்தில் நீண்ட தூரம் சென்று வந்ததை உணர முடிகிறது.
அ.ப.இராசா