தலைவலிக்கான காரணங்களும் அதிகம்; தலைவலிகளின் வகைகளும் அதிகம். ‘மைக்ரேன்’ என்று சொல்லக்கூடிய ஒற்றை தலைவலி, ஏனைய தலைவலிகளிலிருந்து எப்படி வேறுபட்டது; ஒற்றை தலைவலியில் எத்தனை வகைகள் உள்ளன; ஒற்றை தலைவலியைக் கண்டறியும் சோதனைகள் எவை; அவற்றுக்கான சிகிச்சை முறைகள் எவை என்பன உள்ளிட்ட தகவல்கள், ஆலோசனைகள், அனுபவங்கள் என, அனைத்தையும் அடங்கியது இந்த நூல். தலைக்கு என, தனியே ஒரு தலபுராணம் சிறப்பாக அமைந்திருக்கிறது (பக்.11). இதிகாசங்களை கொண்டு, பத்துத் தலை(வலி) இராவணனுடன் மொழி கலப்பிலாமல் ஒப்பிடுவதில், ஆசிரியரின் தமிழ்க் காதல் விளங்குகிறது (பக்.13). மகளிர் மட்டும் என, பெண்களுக்கான தலைவலிகள் (பக். 36, 52), தனியே கொடுக்கப்பட்டுள்ளன.
நூலின் தலைப்பு, கவித்துவம் கொண்டதாக துவங்குகிறது. எளிய, இனிய, நல்ல, பழகுதமிழ் நடையில், தேவையான இடங்களில், பொருத்தமான படங்கள், ஆங்காங்கே நகைச்சுவை என, சிறிதும் அலுப்பு தட்டாமல், சுவாரசியமாய் எழுதியுள்ளார், நூலாசிரியர்.
முனைவர்.இராஜ.பன்னிருகை வடிவேலன்