அன்றாட வாழ்வில் நமக்கு நிகழும் எதைப் பற்றியும் எழுதி உடனடியாகப் பிரசுரித்துக் கொள்ளலாம்; நம்மை பாதிக்கும், நாம் காணும் எதையும் விமர்சிக்கலாம்; கருத்து தெரிவிக்கலாம்; சமூக வலைதளங்களின் மிகப் பெரிய வெற்றியே இதுதான்.
அப்படித் தன்னை பாதித்தவற்றைப் பற்றியும், தன் வா-ழ்வின் சம்பவங்களின் நினைவலைகளாகவும், சந்திக்க நேர்ந்த சமூகப் பிரச்னைகள், அவலங்கள் பற்றியும் தன் முகநூல் பக்கத்தில் பகிர்ந்த பதிவுகளைத் தொகுத்துப் புத்தகமாக வழங்கியிருக்கிறார் கார்ட்டூனிஸ்ட் பாலா. ஓவியராகவும், கார்ட்டூனிஸ்ட்டாகவும் மட்டுமே அறிமுகமாகியிருக்கும் அவருக்கு, எழுத்தாளராக இது முதல் புத்தகம்.
டாஸ்மாக், குழந்தைத் தொழிலாளர், வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வேலை செய்ய வந்துள்ள அப்பாவி மக்கள், கல்வி, சாதி என சமகாலப் பிரச்னைகள் குறித்த, 37 சிறு சிறு கட்டுரைகள் இத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன. சாதி என்ற கருவியை வைத்துக் கொண்டு 50 ஆண்டு காலமாக அரசியல் செய்யும் திராவிட இயக்கங்கள் குறித்த காத்திரமான விமர்சனங்களைப் பல பதிவுகளில் முன் வைக்கிறார் பாலா. பார்ப்பனர்களை வந்தேறிகள் என்று ஒதுக்கிச் சித்தரித்து, பார்ப்பனர் அல்லாதோரின் ஒட்டுமொத்த எதிரியாகச் சித்தரித்து அரசியல் செய்வதையும், ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதையும் விமர்சிக்கின்றன அவரது பதிவுகள். அவை, திராவிட ஓட்டு அரசியல் தந்திரங்களைச் சுட்டுவதைப் போலவே பார்ப்பனர் அல்லாதோரிடம் நிரம்பிக் கிடக்கும் சாதி வெறியைப் பற்றிப் பேசத் தயங்கும் ‘திராவிட கொள்கைக் குன்றுகளின்’ நேர்மையையும், தமிழ்த்தேசிய சந்தர்ப்பவாதிகளின் நேர்மையைக் குறித்தும் கேள்விகளை எழுப்புகின்றன.
சாதி, திராவிடம், பார்ப்பன எதிர்ப்பு, தலித்தியம், பெரியாரியம் போன்ற எல்லாமும் திராவிட இயக்கங்களுக்கும், தமிழ்த் தேசியவாதிகளுக்கும் அரசியல் பிழைப்பு நடத்தவே பயன்படுகின்றன. மற்றபடி மக்களைப் பற்றியோ, சாதி ஒழிய வேண்டும் என்பதைக் குறித்தோ எள் முனையளவு கூட அக்கறையற்றவர்கள்தான் இவர்கள் என்பதை தனது பதிவுகளில் திரும்பத் திரும்ப முன்வைக்கிறார் நூலாசிரியர்.
பெரியாரைக் கடவுளாக்க முயலும் பெரியார் பக்தர்களையும் அவர் விட்டு வைக்கவில்லை. முற்போக்கு முகமூடி அணிந்த போலிப் புரட்சியாளர்கள், பொய்யான சீர்திருத்தவாதிகள் உரிக்க உரிக்க வெங்காயம் போல உள்ளுக்குள் ஒன்றுமில்லாமல் போனவர்கள் என்கிறார்.
அரசியல், சமூகம் தவிர, தான் சந்தித்த மனிதர்கள், விளிம்புநிலை மனிதர்களிடையே இருக்கும் மனித நேயம், குழந்தைத் தொழி
லாளர்கள் போன்றவை குறித்த பல கட்டுரைகள் வாசிப்புச் சுவாரசியம் தருகின்றன.
– பொன். வாசுதேவன்