தமிழுக்குப் புத்துயிர் ஊட்டிய தமிழ்த் தாத்தா, உ.வே.சாமிநாதையர், தன் ஆசிரியர் தியாகராசச் செட்டியார் பற்றி எழுதிய, குருபக்திக்கு இலக்கணமான இந்த நூல், 74 ஆண்டுகளுக்கு பின், ஐந்தாம் பதிப்பாக மலர்ந்து மண் வீசுகிறது. கும்பகோணம் கல்லுாரியில் தமிழ்ப் பேராசிரியராக பணியாற்றிய செட்டியார், தனக்குப் பின் அந்த பணியை தன் மாணவர் உ.வே.சா.,வுக்கு ஏற்பாடு செய்து தந்தார். அந்த நன்றிக்கடனுக்காக, உ.வே.சா., சென்னை திருவல்லிக்கேணி திருவேட்டீஸ்வரன் பேட்டையில் வசித்த தன் வீட்டிற்கு, ‘தியாகராச விலாசம்’ என, பெயர் சூட்டி மகிழ்ந்தார்.
அரைகுறையாக தமிழைப் படித்து விட்டு, தனக்கு நிகர் யாருமில்லை என்று தம்பட்டம் அடிப்போர் இன்றும் உள்ளனர். நன்னுாலை தவறாகப் பதிப்பித்த உயர்நீதிமன்ற வழக்கறிஞரை துணிவோடு எதிர்த்து, அந்த நூலுக்கும் தடை வாங்கியவர் தியாகராசர்.
பல உலகியல் உண்மைகள் இந்த நூலில் பதிவாகி உள்ளன.
‘படிப்புக்கு மதிப்பே இல்லை. நாலுபேர் சேர்ந்து கூச்சல் போட்டால் காரியம் ஜெயித்து விடுகிறது’ (பக். 86) படிப்போரை உயர்த்தும் உருப்‘படி’யான நூல்.
முனைவர் மா.கி.ரமணன்