கடந்த, 2014ல், இந்தியாவில் பரபரப்பைக் கிளப்பி, சர்ச்சைக்குள்ளான நூல் இது. நூலாசிரியர், வெண்டி டோனிகர், ஹார்வர்டு, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகங்களில், சமஸ்கிருதம், இந்திய ஆய்வு ஆகியவற்றில் முனைவர் பட்டங்களைப் பெற்றவர்.
இந்த நூலில் மொத்தம், 25 இயல்கள் உள்ளன. இந்து மதம் தொடர்பான வழக்கமான நூல்களில் இருந்து, பலவிதங்களில் வேறுபட்டது என்கிறார் நூலாசிரியர். ஒன்று, இது மாற்றுக் கதையாடலை முன்வைக்கிறது; இரண்டாவது, வரலாற்றின் அடிப்படையில், மதக் குறியீடுகளை நோக்குவது; மூன்றாவது, மதத்தின் கதையாடலை, வரலாற்றின் கதையாடலுக்குள் வைக்கும் முயற்சி.
அதாவது, அந்தந்த காலத்திற்கு ஏற்றவாறு, இந்து மதம் எவ்வாறு எதிர்வினை புரிந்துள்ளது என்பதை விளக்கும் முயற்சி என, விளக்குகிறார் நூலாசிரியர். இந்து என்பதன் வரையறை, கோண்ட்வானா, லெமூரியா நிலப் பகுதிகளின் வரலாற்றுப் பின்னணி, சிந்துவெளி, வேதம், உபநிஷதம், இதிகாசம், தென்னிந்தியா, புராணங்களில் குறியீடு, தாந்திரீகப் புராணங்கள், முகலாயர், பிரிட்டிஷார் நிர்வாகத்தில் சீர்திருத்தங்கள் என, பல்வேறு தலைப்புகளில், இந்து மதம் குறித்த விரிவான ஆய்வு நூல் இது.