வாழ்வின் விழுமியங்களை வண்ணக் கலவையாய்த் தன்னகத்தே வைத்திருக்கும் சங்க இலக்கியங்களைச் சாறு பிழிந்து, அவற்றினுள் புதைந்து கிடக்கும் சால்பை, சிறப்பை, சீரை, செவ்வியை இன்றைய கணினி யுகத்தைச் சார்ந்த மக்களுக்கு குறிப்பாக இளைய தலைமுறையினருக்குச் சென்று சேர்க்கும் விதத்தில் இந்நூலில் கட்டுரைகள் திட்டமிட்டு எழுதப் பெற்றுள்ளன.
சீரிய உளவியல் பாங்கும், அரிய வரலாற்றுக் குறிப்பும் ஒரு சேரப் பெற்றுப் பொலியும் மோசிகீரனாரின் குறுந்தொகைப் பாடலின் பொருண்மையையும், நயமும், நளினமும், நாகரிகமும் கொலுவிருக்கும் நற்றிணைப் பாடல்களின் திறத்தையும் பதிவு செய்துள்ளார்
நூலாசிரியர். மேலும், நிலையாமை என்னும் கோட்பாடு இந்தியத் தத்துவங்களில் காணப்படினும் அதன் பல்வேறு திறங்களையும் தொகுத்து, ‘காஞ்சி’ என்று பண்டைத் தமிழர் குறியீடு தந்த சிறப்பு இந்தியத் தத்துவங்களில் வேறெங்கும் இல்லை.
‘ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே’ என்னும் பொன்முடியார் பாடலில் கடன், சோன்றோன், நடை போன்ற சொற்களின் சொல்லாட்சியை வியந்து போற்றும் கிள்ளி வளவனின் புறநானூற்றுப் பாடலில் அமைந்து உள்ள, ‘பசிப்பிணி மருத்துவன்’ என்னும் சொல்லாட்சி, குறுந்தொகைப் பாடலில், ‘ஓர் ஏர் உழவன்’ என்னும் உவமைத் தொடர் போன்றவற்றை நயம்பட விளக்கியுள்ளார்.
மனித வாழ்வின் புறக்கோலங்களும், மாறலாம் ஆயின் மனித குலத்தின் அக உணர்வுகள் என்பவை வற்றாத ஜீவ நதியைப் போல் என்றும் உயிர்ப்புடன் இயங்குபவை என்பது மையக் கருத்தாக இருப்பது சிந்தனைக்குரியது.
புலவர் சு.மதியழகன்