சங்கச் செய்யுள் என்று தமிழ் மக்களால் நன்கு மதித்துக் கொண்டாடப் பெறும் கடைச்சங்கப் பனுவல்களுள் ஒரு பிரிவாகிய எட்டுத்தொகையில், ஆறாவதாக வைத்துப் போற்றப்படும் நூல் கலித்தொகையாகும். ‘எழுந்தது துகள்; ஏற்றனர் மார்பு; கவிழ்ந்தன மருப்பு; கலங்கினர் பலர்’ என, தமிழர் வீரத்திற்கு சான்று பகறும் ஏறுதழுவல் எனும் ஜல்லிக்கட்டு பற்றிய அதிகப்படியான பாடல்களை கொண்ட கலித்தொகையானது, ‘கற்றறிந்தோர் போற்றுங்கலி’ என்று அழைக்கப்பெறும் சிறப்புக்குரியது.
‘இல்லென இரந்தோர்க்கொன் றீயாமை இழிவு’ என, கொடைத்திறத்தையும், ‘துன்பம் துணையாக நாடின் அதுவல்லது இன்பமுண்டோ எமக்கு’ என்று காதலையும், ‘கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும் புல்லாளே ஆயமகள்’ என்று வீரத்தையும் பாடுபொருளாகக் கொண்டு, சங்ககால வாழ்வியல் விழுமியங்களை எடுத்துக்கூறும் கலித்தொகையானது, ஈடிணையற்றதொரு இலக்கியம்.
முதன்முதலில், 1887ல், சி.வை.தாமோதரம் பிள்ளையால் பதிப்பிக்கப் பெற்ற கலித்தொகை, நச்சர் உரையுடன் வெளியாகி, பின் பல்வேறு பதிப்புகளை கண்டுள்ளது. காலத்திற்கேற்ப பல திருத்திய பதிப்புகள் வெளியானாலும், நமது செவ்வியல் இலக்கியங்களை பிற நாட்டாரும் படித்தறியும் வண்ணம், ஆங்கில மேற்கோள்களுடன் கூடிய புதிய பதிப்புகளின் தேவையானது இன்றளவும் அதிகமே என்பதை மறுப்பாரில்லை.
அவ்வகையில், பல்வேறு சுவடிகளைக் கொண்டு வெளிவந்த பதிப்புகள் பல இருப்பினும், 125 கால கலித்தொகை பதிப்பு வரலாற்றில் பல சுவடிகளை இழந்துள்ள நிலையில், சென்னைக் கீழ்திசைச் சுவடி, உ.வே.சா., நூலகங்களிலிருந்தும், மேலும் சில இடங்களிலிருந்தும் பெறப்பட்ட பல சுவடிகளின் அடிப்படையில், இதுவரை வெளிவந்துள்ள கலித்தொகையின் பல பதிப்புகளை ஒப்பாய்வு செய்து, பதிப்பின் தொடக்க நிலை, பதிப்பின் படிகள், பதிப்புமுறை, பாட வேறுபாடு, பதிப்புக்கு பயன்பட்ட சுவடிகள், காகிதப் படிகள், இதுவரை வெளிவந்த பதிப்புகள் மற்றும் கலித்தொகையின் தொடக்கம் மற்றும் இறுதியின் நிழற்படங்கள் இணைத்து, சங்க இலக்கியங்கள் – செம்பதிப்பு வரிசையில் வெளிவந்துள்ள இந்தப் பதிப்பானது, சிறந்த பதிப்புகளுள்
முன்னிலைப் பெறும் ஒன்றாகும்.
சங்க இலக்கிங்களில் காதல், மடலேறுதல் என்று அகப்பொருட் செய்திகளுடன், தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு குறித்தும் அதிகம் பாடும் கலித்தொகை, பண்டைய காலத் தமிழர்களின் வாழ்வியலை எடுத்துக்காட்டும் காலக் கண்ணாடி. காதல் என்பது உயரிய நெறி என்பதை விளக்கும் பாடல்களில் அக்காலத் தமிழர்களின் விழுமிய பண்பு நலன்களை எடுத்தியம்புவதாக உள்ளது. வாழ்வின் பல கூறுகளை அழகாக விளக்கும் இவை, நமது
பண்பாட்டுக் கருவூலமாகும்.
தமிழ் இலக்கிய உலகிற்கு நல்லதொரு பதிப்பை வழங்கியுள்ள இப்பதிப் பாசிரியரின் முயற்சியும், அவருக்கு உதவிய மாபெரும் தமிழறிஞர்களையும் முன்னுரையில் ஆசிரியர் குறிப்பிட்டுஇருப்பது, இந்த படைப்பின் சிறப்பைக் காட்டுகிறது. ஆங்கிலத்தில் அமைந்த விளக்கங்கள், நமது கலாசார பெருமையை மற்றவர்களுக்கு உணர்த்தும். கல்லூரிகள், நூலகங்களில் இருக்க வேண்டிய நூல்.
– கவிதைக்காரன் ஆதி