தமிழ் கண்ட அபூர்வம் சில, கடல் சூழலியல், வாழ்வியல் எழுத்தாளர்களில் முன்வரிசையில் வருபவர், முனைவர் வறீதையா கான்ஸ்தந்தின். இவர் வரைந்த அறிவியல், சூழலியல் பேசும் புத்தகம் இது.
கடலில் கால் நனைத்து, முடிந்தால் குளித்து, ஆர்ப்பரிக்கும் அலைகளை கண்டு ஆச்சரியப்பட்டு, சில நிமிடங்களில் அங்கிருந்து கிளம்பி விடும் நமக்கு, கடலும், கடல் சார்ந்த வாழ்வும் அந்நியமாக அறியப்படுவதில் ஆச்சரியமில்லை. அந்த அடித்தட்டு மக்களுடன் வாழ்ந்து, அவர்களின் வாழ்பனுவத்தை, தன் அறிவியல் அறிவால் அறிவார்ந்த பல புத்தகங்கள் தந்தவர் வறீதையா.
இந்த புத்தகத்திலும் 9 கட்டுரைகளில், கடலோர மனிதர்களின் அறவியல் வாழ்வை அசைபோட்டிருக்கிறார்; கடல் சூழலியல் கெட்டுவிட்டால், பூமிபந்து பார்க்க இருக்கின்ற அபாயங்களை பட்டியலிட்டிருக்கிறார்.
‘கடல் பழங்குடிகள்’ என்ற கட்டுரையில், உலகின் 60 சதவீத மக்கள் கடற்கரை பிரதேசத்தில் வாழ்கின்றனர். 75 சதவீத நகரங்கள் அலைவாய்க்கரையில் அமைந்துள்ளன. கடலின் உயிர்வளங்கள் தொடர்ந்து, மிகையாய் சூறையாடப்படுவதால் கடலுயிர்ச்சூழல் அழிவை நோக்கி போய் கொண்டு இருக்கிறது’ என்று நம்மை எச்சரிக்கிறார்.
கடலோர மக்களின் வாழ்வியல் அறத்தை, வறீதையா வார்த்தைகளாக வடிக்கும் போது, பைபிளையும், பாரதியையும் பகிர்ந்திடுகிறார். ‘முகம் மாறும் நிலம்’ - முகம் மாறும் மனிதர்களை பற்றியதும் கூட!
- ஜிவிஆர்