இந்நூலாசிரியர் பல்வேறு நாடுகளுக்கு சென்ற நிகழ்வுகள், அந்த நாடுகளில் உரையாற்றிய செய்திகள் சில, ஆன்றோர்கள் பற்றிய இவரின் கருத்துகள், ஒரு நேர்காணல் என கதம்பமாக, 35 கட்டுரைகள் கொண்ட நூல் இது.
தமிழ்மணி, மு.மேத்தா, கா.வேழவேந்தன், இன்பதாசன், சா.சாமுவேலு ஆகிய கவிஞர்கள் இயற்றிய கவிதைகளின் நலம் பாராட்டுதலும் இந்நூலில் ஆங்காங்கே உள்ளன. இவர் மேடைகளில் படித்த சில, பல முக்கிய இடங்களில் இருந்து இயற்றிய கவிதைகளும், கட்டுரைகளின் இடையிடையே காணப்படுகின்றன.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் ஏழாம் உலகத்தமிழர் ஒற்றுமை மாநாடு போன்ற சில கட்டுரைகள், கூட்ட அறிக்கைகளாகவே உள்ளன. கனடாவில் டொரண்டோ நகரில், ‘யாதும் ஊரே’ நூல் வெளியீட்டு ஏற்புரை முதலிய சில கட்டுரைகளை, சொற்பொழிவுகளின் சுருக்கமாகவே கருத வேண்டியுள்ளது.
நிறைவுக்கட்டுரை ஒரு நேர்காணல் வினாக்கள் முனைவர் சாந்தியினுடையவை. அந்நேர்காணலின் விடைகளிலிருந்து இவர் தம் பணிகளின் அகலத்தை அறிய முடிகிறது. ஆயினும், எத்தலைப்பில் எழுதிய ஆய்வேட்டிற்காக அந்நேர்காணல் நிகழ்ந்தது என அறிய முடியவில்லை. ‘செல்வி’ என்பதற்கு காலம் என்பது பொருள் ஆகும்.
– ம.வே.பசுபதி