இந்திய விடுதலை போராட்ட வீரர்களுள் குறிப்பிடத்தக்கவர் விசுவநாத தாஸ். தன் நடிப்பாலும், மேடை நாடகப் பாடல்களாலும் மக்களிடத்தில் சுதந்திர உணர்வை ஊட்டியவர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டு, சிறை சென்று துன்புற்றவர்.
வறுமையில் துன்புற்ற போது, ஆங்கிலேய கவர்னர் பொருளாதார உதவி செய்ய முற்பட்ட போது, மறுத்துவிட்டு வறுமை யில் வாடியவர் விஸ்வநாத தாஸ்.
அண்ணல் காந்திஜி, நேருஜி, வ.உ.சி., பசும்பொன் முத்துராமலிங்கம் முதலானோர் இவருடைய பாடல்களை கேட்டு, நெஞ்சை பறி கொடுத்தனர்.
‘பஞ்சாப் படுகொலை பாரில் கொடியது, பழி பாவமுடையது’ போன்ற பாடல்களை பாடி, ஆங்கிலேயரை எதிர்த்தார். நாடக மேடையிலேயே கைது செய்யப்பட்டார். நாட்டின் விடுதலைக்காக பாடுபட்டு, கொள்கை பிடிப்போடு வாழ்ந்த விடுதலை வேந்தன் விசுவநாத தாஸ், வள்ளி திருமணம் நாடகத்தில் மயில் மீது அமர்ந்து பாடிய போது, நெஞ்சு வலி ஏற்பட்டு நாடக மேடையிலேயே உயிரை விட்டு, புகழால் உயர்ந்தார், உத்தமர் விசுவநாத தாஸ்.
விசுவநாத தாசின் வாழ்க்கையை தம் எழுத்திலே படம் பிடித்து காட்டியுள்ளார் நூலாசிரியர்.
எல்லாரும் படிக்க வேண்டிய நல்ல நூல்.
– பேரா., ம.நா.சந்தான கிருஷ்ணன்