நாஞ்சில் நாடன் பன்முகம் கொண்ட படைப்பாளி. கவிதைகள், நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், நேர்காணல்கள் என்று, 40 புத்தகங்களுக்கு மேல் எழுதிக் குவித்து இருக்கிறார்.
இது அவரது, 13வது கட்டுரை நூல். அவரது முந்தைய கட்டுரை நூல்களில் பெரும்பாலானவை பல பதிப்புகள் கண்டவை. எட்டு பதிப்புகள் கண்டவையும் இரண்டு நூல்கள் உண்டு!
தமிழ் இலக்கியப் பயணத்தில் நாஞ்சில் நாடனின் கவனம் கட்டுரைப் பக்கம் திரும்பியது. 2003ல் இருந்து இன்று நின்று திரும்ப நேரம் இல்லா அளவுக்கு நாஞ்சில் நாடனின் கட்டுரை எழுத்து தீவிர கதியில் இருக்கிறது!
‘விசும்பின் துளி’ ஒரு தமிழ்த் தேன் பலா!
இதோ சில சுளைகள்...
‘மரத்தில் மறைந்தது மா மத யானை’ என்று ஒரு கட்டுரை. இலக்கியங்கள் திரைப்படம் ஆவதைக் குறித்து...
என், ‘தலைகீழ் விகிதங்கள்’ என்ற கதை – தங்கர்பச்சானால், சொல்ல மறந்த கதையாகத் திரைப்படம் ஆக்கப்பட்ட பின், பலர் என்னிடம் பகிர்ந்து கொண்டிருக்கின்றனர்.
நாவல் வாசிப்பில் தந்த நிறைவை திரைப்படம் தரவில்லையே என்று. நான் அவர்களிடம் சொன்னது, நாவல் பிரதியைக் கையில் வைத்துக் கொண்டு, அருள்கூர்ந்து சினிமாவைப் பார்க்காதீர்கள் என்று... நாவலின் மொழி வேறு; சினிமாவின் மொழி வேறு.
நாவலாசிரியனின் படைப்புத் திறனும், சினிமா இயக்குனரின் படைப்பு திறனும் ஒப்பிடத்தக்கதன்று.
ஒரு கட்டுரை, சதாவதாணி செய்குத்தம்பி பாவலரின் சிறப்பு குறித்துப் பேசுகிறது. நாஞ்சில் நாடனின் எழுத்தில், கம்பனின் தாக்கம் குறித்து இன்னொரு கட்டுரை பேசுகிறது. ஒரு கட்டுரையில் எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் சிறப்பைப் பேசுகிறார்.
மிக இலகுவாகக் கையாளப்பட்ட மக்கள் மொழி, உரையாடல்களின் மண் வாசம், புழுதியும் உப்புப் பொரிந்த முதுகும், பறந்த தலைமுடியும், வெற்றிலை பாக்கு, மூக்குப்பொடி, சுருட்டு வாசமும் கொண்ட கதை மாந்தர்கள்...
இனிய நடையில் எழுதப்பட்ட ரசிகமணி நாஞ்சில் நாடனின் கட்டுரைகள் நீடித்த இன்பம் அளிக்கவல்லது.
– எஸ்.குரு