பேராசிரியர் ம.திருமலையின் ஆய்வுகள் என்ற நூல், ஒப்பியல் நோக்கு, திறனாய்வுப் பார்வை, இலக்கியச்சுவை, பக்தி நெறி, புனைக்கதைத் திறன், இலக்கிய வித்தகர்கள், ஆளுமை வளர்ச்சி என்ற ஏழு பகுதிகளையும், 40 கட்டுரைகளையும் உள்ளடக்கியது.
சிந்தனையை தூண்டுவனவாகவும், ஆய்வியலுக்கு வழிகாட்டியாகவும் இந்த நூல் அமைந்து உள்ளது.
ஒப்பிலக்கியம் என்பது உண்மையை கண்டறியவும், உள்ளதை விளக்கவும் பயன்படுகிறது. ஒப்பிலக்கியப் பார்வை, ஒருவருக்கு பிற இலக்கியங்களை மதிக்கவும் கற்றுத் தருகிறது (பக்., 7).
இறைவன் உலகில் அனைத்துமாக நிற்பவன். உயிர்களுடன் கலந்து ஒன்றாகியும், பொருள் தன்மையால் வேறாகியும், உடனாகியும் நிற்கிறான் என்று சைவ சித்தாந்தம் கூறுகிறது. எழுத்துக்களில், ‘அ’ என்னும் உயிர் எழுத்து மிக முக்கியமானது.
இவ்வெழுத்து மற்ற எழுத்துக்களுடன் இணைந்து, அவ்வெழுத்துக்களை ஒலிக்கச் செய்வது போல் இறைவன் உயிர்களுடன் கலந்து, அவற்றை இயக்குகிறான். ‘ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே...’ என்று அப்பர் தேவாரம் கூறுகிறது.
இறையனுபவ உலகில் அனைவரும் ஒன்றே. முரண்பாடுகள் வேறுபாடுகள் என்று ஏதுமில்லை. இறைவன் என்ற பேரொளி, ஏனைய அனைத்தையும் சமநிலைப்படுத்தவும், ஒன்றுபடுத்தவும் வல்லது. பக்தியின் மூலம் இவ்வுலகத்தின் துன்பங்களை நீக்க முடியும் என்று உலகிற்கு உணர்த்தியவர் குலசேகர ஆழ்வார்.
இவ்வுலக வாழ்க்கையை மெய் என்று மனிதன் எண்ணுகிறான். அதனால், அதன் மீது பற்று வைக்கிறான். ஆனால், உலக வாழ்வின் உண்மை நிலையை ஆழ்ந்து உணரும்போது, அது, மெய் போல் தோற்றமளிக்கும் பொய் என்பது புலனாகும். இதை உணர்ந்தால், இறையருள் கிட்டும் என்கிறார் குலசேகரர்.
நூலின் இறுதியில் ஆளுமை வளர்ச்சி என்ற பகுதியில் படிப்பது எப்படி, நினைவாற்றலை வளர்ப்பது எப்படி? பேச்சு ஒரு சிறந்த கலை, முயற்சி உண்டெனில் முழுமை காணுவோம், திருக்குறளில் தன் முன்னேற்றம் என்ற கட்டுரைகள் எக்காலத்திலும், எல்லாருக்கும் பயன் தரக்கூடியவை.
–பேராசிரியர் முனைவர் ரா.நாராயணன்