மனிதநேயத்தைப் பொறுத்தவரையில் வேண்டுதல் வேண்டாமை அற்றவராக விளங்கி, அனைத்துத் தரப்பினர் இதயத்தையும் ஈர்த்து, பொன்மனச் செம்மல், புரட்சி நடிகர், மக்கள் திலகம் என்று மக்களால் அன்போடு அழைக்கப்பட்ட, முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் வாழ்க்கைச் சம்பவங்களின் பதிவு இந்நுால்.
‘பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும்’ எனும் குறள் நெறிக்கேற்ப ஏழைகளிடம் உண்மையான நேசம் கொண்டு, பாகுபாடு பாராமல் பழகிய சில தலைவர்களில் ஒருவர்; வெள்ளித்திரையில் தன் இயல்பான நவரச நடிப்பால், கோடிக்கணக்கான இதயங்களை வென்றவர்; தமிழ் மண்ணில் எட்டாம் வள்ளலாகப் போற்றப்படுபவர் என்பது போன்ற, எம்.ஜி.ஆரின் பல்வேறு பரிமாணங்களும் தக்க நிகழ்வுகளோடு இணைத்துச் சொல்லப்பட்டுள்ளன.
கேரளாவில் நேர்மையான மாஜிஸ்திரேட்டாகவும், இலங்கையில் கல்லுாரி முதல்வராகவும் பணியாற்றிய கோபாலன் மற்றும் சத்யபாமா தம்பதிக்கு மகனாகப் பிறந்து, இளமையில் தந்தையை இழந்து, கொடிய வறுமையில் வாடி, புகழின் உச்சியை அடைந்து, லட்சம் லட்சமாக கொடை வழங்கிய எம்.ஜி.ஆர்., தன் பட்டினிக் காலத்தில் மதுரை ஒரிஜினல் பாய்ஸ் கம்பெனியில் கூலியாக வாங்கிய ஐந்து காசுகளை நினைவுபடுத்துகிறார் நுாலாசிரியர்.
இந்தியாவின் கவர்ச்சிமிக்க கதாநாயகனாகப் போற்றப்பட்டு, பொது வாழ்க்கையில் பரிவும், கருணையும் மிக்கவராக விளங்கிய எம்.ஜி.ஆரின் திரையுலக வாழ்க்கை மற்றும் அரசியல் வாழ்க்கையின் பல்வேறு நிகழ்வுகள், மனதை வசப்படுத்துகின்றன.
– மெய்ஞானி பிரபாகரபாபு