கோட்பாடுகளில் வரையறைக்கு அப்பாற்பட்டது பௌத்தம். பதிமூன்றாம் நூற்றாண்டு கால அளவிலும் பெரும் செல்வாக்குள்ள சமயமாக விளங்கியது. பௌத்த சமய பின்புலத்தில் காப்பியங்கள் உட்பட பல்வேறு நூல்கள் இயற்றப்பட்டு உள்ளன.
தமிழ் வளர் சூழலில் பௌத்த சிந்தனைகள் ஏற்படுத்திய தாக்கங்களை, சங்க இலக்கியம் தொட்டு, பக்தி இயக்க காலகட்டம் வரை, அதற்குப் பிந்தைய காலம் என வேறுபடுத்தி பார்க்க வேண்டியதாகக் குறிப்பிடப்படுகிறது.
தமிழ் இலக்கண மரபிலும் பௌத்த சிந்தனைகளின் தாக்கங்கள் இருந்தமை போதிய அளவில் பரவலாக்கப்படவில்லை என்பதும் உணரப்படுவதாக உள்ளது.
தமிழ் இலக்கண மரபில் தடம் பதித்து ஐந்திலக்கண மரபினை பகுத்தும் தொகுத்தும் முதலில் கட்டமைத்தவர் பௌத்தரான புத்தமித்திரனார்.
மாறிவந்த இலக்கியச் சூழலுக்கேற்ப செறிவான இலக்கண மரபுகளைத் தோற்றுவித்தாலும், பெருந்தேவனாரால் விரிவுரை பகரப்பட்டிருந்தாலும் பௌத்த பின்புலத்தில் இருந்து வந்தமையால் இவற்றினை வரவேற்று ஏற்பதில் இறுக்கம் இருப்பதாகவே கருதப்படுகிறது.
சங்க இலக்கியப் பொருள் மரபைப் போற்றுவோர், தொல்காப்பியத்தைத் துணைக்கு வைப்பதுபோல், நன்னுாலுக்கு முன்னர் இயற்றப்பட்ட வீரசோழியத்தை அணுகவில்லை என்பது ஆதங்கமாக வெளிப்படுகிறது.
இறையனார் அகப்பொருள் மரபு, தொலகாப்பிய மரபு போன்றவற்றில் இலக்கண மரபுக்குள் வராத பலவும் வீரசோழியத்தில் அர்த்தப்படும் என்று தன் கருத்துரைக்கிறார் நுாலாசிரியர் அய்யப்பன்.
தமது காலத்திய இலக்கிய இலக்கண மரபையும், மொழி வளத்தையும் உள்வாங்கி இலக்கணம் புனைந்தவர் புத்தமித்திரனார். ஐந்திணை இலக்கண மரபுகளுக்கான அவரது விளக்கங்கள் நூலில் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
தொல்காப்பியரின் புணரியலுக்கு மாற்றாக சந்தியை உருவாக்கி அவர் அடையாளப்படுத்துவது பௌத்த சிந்தனை மரபினதாகும்.
தொல்காப்பியர், அவிநாயனார் இருவரின் இலக்கண மரபிற்கு உட்பட்டு தன் சொல்லிலக்கணத்தைக் கட்டமைத்திருப்பதை நுாலாசிரியர் முன்வைக்கிறார்.
வெண்பாவில் செவிப்புலன் ஓசை அலகின்படி அளபெடை பற்றிய கருத்தமைப்பு மாறுபட்ட சிந்தனைக்குள்ளாகிறது.
இவையன்றி, பௌத்த சிந்தனைகளுக்கு உட்படுத்தப்பட்ட பல்வேறு சங்க இலக்கிய தலைப்புகள் புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கின்றன.
–மெய்ஞானி பிரபாகரபாபு